மத்திய அரசுக்கு எதிரான திரிணாமுல் தீர்மானம்: மார்க்சிஸ்ட் கட்சியின் 'சூப்பர் டூப்பர்' விளக்கம்
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத், திரிணாமுல் காங்கிரஸின் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தோற்கடிப்பதற்கான பலம் காங்கிரஸ் கூட்டணிக்கு உள்ளது. தீர்மானம் தோற்று காங்கிரஸ் அக்கூட்டணி வென்றால் மத்திய அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் வலுவிழந்துவிடும். இதனால் தீர்மானம் கொண்டு வருவதற்குப் பதிலாக அரசின் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். அத்துடன் எதிர்க்கட்சிகளில் பெரும்பாலானவை, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படுவதை விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்குப் பதிலாக, சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்துவதுதான் சரியாக இருக்கும். அதுபோன்றதொரு தீர்மானத்தைக் கொண்டுவர நாங்கள் முயற்சிக்கிறோம். திரிணாமுல் காங்கிரஸைப் பொறுத்தவரை அவர்கள் சொல்வது ஒன்று, செய்வது வேறாகத்தான் இருந்து வந்திருக்கிறது என்று கூறியுள்ளார்.