குஜராத்தின் 'சிங்கங்களை' இடம் மாற்றும் விவகாரம்: ம.பி.க்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

இந்தியாவிலேயே குஜராத்தின் கிர்வனப்பகுதியில்தான் சிங்கங்கள் வாழ்கின்றன. அண்டை மாநிலமான மத்திய பிரதேசம் தங்களது மாநில வனப்பகுதிக்கும் சில சிங்கங்களை அனுப்பி வைக்கக் கோரியது. இதற்காக பல்பூர் வனச்சரணாலயத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் குஜராத் மாநில பாஜக அரசோ இதனை நிராகரித்தது. சிங்கங்கள், குஜராத் மாநிலத்துக்கே உரிய தனித்துவமான கவுரமான விஷயம். அதை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் அறிவித்திருந்தது.
இதனிடையே குஜராத்தின் கிர் வனப்பகுதியில் வாழும் சிங்கங்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், இவற்றில் சிலவற்றை மத்திய பிரதேசத்துக்கு இடமாற்றம் செய்து அதன் இனப்பெருக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநலன் வழக்கும் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மத்திய அரசு, குஜராத் மற்றும் மத்திய பிரதேச அரசுகள் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்திருந்தன. இதில் மத்திய அரசோ, மத்திய பிரதேச மாநில அரசுக்கு ஆதரவு தெரிவித்து குஜராத்தில் இருந்து சிங்கங்களை இடமாற்றம் செய்யலாம் எனக் கூறியிருந்தது. ஆனால் இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிடாமல் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 6 மாதங்களுக்கு குஜராத்தின் கிர் வனப்பகுதியில் இருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிங்கங்களை மத்திய பிரதேசத்துக்கு மாற்ற உத்தரவிட்டது. எத்தனை சிங்கங்களை இடமாற்றம் செய்வது என்பது தொடர்பாக வல்லுநர் குழு தீர்மானிக்கும் என்றும் சிங்கங்கள் அடியோடு அழிந்து போவதைத் தடுக்கும் வகையில் அதற்கு மற்றொரு வனப்பகுதி அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டும் இத்தீர்ப்பு வழங்கப்படுவதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கும் ம.பி. முதல்வர் சிவ்ராஜ் சிங் செளகானுக்கும் இடையே உட்கட்சியில் நீடிக்கும் அதிருப்தி இப்படியெல்லாம் வெடிக்கிறதோ!












Click it and Unblock the Notifications