பெங்களூர் குண்டுவெடிப்புக்கு காரணம் 'இந்தியன் முஜாஹிதீன்'- உள்துறை அமைச்சகம்
டெல்லி: பெங்களூரில் நேற்று நடந்த இரு குண்டு வெடிப்புகளுக்கும் காரணம் இந்தியன் முஜாஹிதீன்- பத்கல் என்ற அமைப்பாக இருக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கர்நாடக சட்டசபைக்கு வரும் மே 5-ம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த தேர்தலைச் சீர்குலைக்கும் வகையில் மல்லேசுவரத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைமை அலுவலகம் எதிரே நேற்று காலை 10.30 மணிக்கு, திடீரென்று குண்டு வெடித்தது.
இதில் இரு கல்லூரி மாணவிகள் உள்பட 16 பேர் படுகாயமடைந்தனர். 2 வேன்கள், ஒரு கார், ஒரு ஸ்கூட்டர், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவையும் தீப்பற்றி எரிந்தன.
பெங்களூரில் நடந்துள்ள இந்த குண்டு வெடிப்பு தீவிரவாதிகளின் நாசவேலைதான் என்று, கர்நாடக மாநில துணை முதல்வரும், உள்துறை மந்திரியுமான ஆர்.அசோக் திட்டவட்டமாக அறிவித்தார்.
இந்தியன் முஜாஹிதீன்
7/11 மும்பை குண்டு வெடிப்பு மற்றும் ஹைதராபாத் குண்டு வெடிப்புகளுடன் பல வகைகளில் பெங்களூர் குண்டு வெடிப்பு ஒத்துப் போவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது இந்தியன் முஜாஹிதீன்- பத்கல் என்ற அமைப்பின் வேலைதான் என்றும் இதன் பின்னணியில் முந்தைய குண்டுவெடிப்புகளுக்குக் காரணமான யாசின் பத்கல், வாகாஸ், தப்ராஸ் மற்றும் படா சாஜித் ஆகியோர் இருக்கலாம் என்றும் உள்துறை அமைச்சகம் கருதுகிறது.