இதனால எல்லாருக்கும் சொல்றது என்னனா... சீக்கிரமா தமிழ்நாட்டுல மின்வெட்டு நேரம் குறையப்போகுதாம்!
சென்னை: தமிழகத்தில் 20 நாட்களில் மின்சாரம் உற்பத்தி மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
தமிழக காற்றாலைகள் 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து அனைவரையும் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. வரும் 20 நாட்களில் கூடுதலான மின்சாரத்தை காற்றாலைகள் உற்பத்தி செய்ய வாய்ப்பிருப்பதாக மின்சார வாரிய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
காற்று சீசன் ஆரம்பிச்சுடுச்சு...
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கினாலே மின்சாரத்தின் தேவை அதிகரிப்பதும், உற்பத்தி குறைந்து காணப்படுவதும் இயற்கை தான். ஆனால் இந்த ஆண்டு தேவைக்கு ஏற்ப மின்சார உற்பத்தியும் போதிய அளவு இருக்கிறது. குறிப்பாக காற்றாலைகளுக்கு தேவையான காற்று சீசன் தொடங்குவதற்கு முன்பாகவே ஓரளவு காற்று வீசுவதால் காற்றாலைகள் மின்சாரத்தை உற்பத்தி செய்ய தொடங்கி உள்ளன.
காற்றாலை மின்சார உற்பத்தி...
குறிப்பாக கடந்த 16-ந்தேதி 2,088 மெகாவாட், 17-ந்தேதி அதிகாலை 1.50 மணிக்கு 1,951 மெகாவாட்டும், நேற்று 1,650 மெகாவாட்டும் உற்பத்தி செய்துள்ளன. சராசரியாக 1,800 முதல் 2 ஆயிரம் மெகாவாட் வரை காற்றாலைகள் மின்சாரம் உற்பத்தி செய்துவருகிறது. எப்படியும் 15 அல்லது 20 நாட்களில் காற்றாலைகள் மின்உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இரவு நேரங்களில் அதிகம்...
தற்போதைய சூழ்நிலையில் இரவு நேரங்களில் காற்றாலைகள் அதிகளவு மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. பகல் பொழுதில் மின்சார உற்பத்தியின் அளவு குறைவாகவே இருக்கிறது. இதனால் காற்றாலையை முற்றிலுமாக நம்பிவிட முடிவதில்லை. நன்றாக உற்பத்தி இருப்பது போல் தோன்றினாலும் திடீரென்று உற்பத்தியே இல்லாத நிலையும் ஏற்பட்டுவிடும்.
மின் தேவை பூர்த்தியாகுமா?
தமிழக மின்தேவையை பூர்த்தி செய்வதற்காக மத்தியதொகுப்பிலிருந்தும் மின்சாரம் பெறப்படுகிறது. குறிப்பாக தேசிய அனல்மின்நிலையத்திலிருந்து 2,600 மெகாவாட், சிம்காத்திரி 1,000 மெகாவாட், நெய்வேலி 1,470 மெகாவாட், நெய்வேலி விரிவாக்கம் 420 மெகாவாட், தாள்சர் 2,000 மெகாவாட், அணுமின்நிலையங்களான சென்னை 440 மெகாவாட், கல்பாக்கம் 880 மெகாவாட் உட்பட 9,310 மெகாவாட் மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.
இயந்திரக் கோளாறு...
ஆனால் மூன்றில் ஒரு பங்காக சராசரியாக 3,044 மெகாவாட் மின்சாரம் மட்டுமே பெறப்படுகிறது. இதற்கு மின்தொடர் கட்டமைப்பு போதிய வசதி இல்லாதது மற்றும் மத்திய தொகுப்பு சார்பாக மின்சாரம் வழங்கும் மின்சார நிலையங்களில் அடிக்கடி இயந்திர கோளறு போன்ற காரணங்களால் தமிழகத்திற்கு மத்திய தொகுப்பிலிருந்து குறைவாக மின்சாரம் பெறப்படுகிறது.
மின்தடை முற்றிலும் நீங்கும்...
எனவே விரைவில் மின்தொடர் கட்டமைப்பின் திறனை மேம்படுத்த வேண்டும். இதுபோன்ற பிரச்சினைகளை தீர்த்துவிட்டால் தமிழகத்திற்கு மின்தடை முற்றிலுமாக நீக்கப்பட வாய்ப்பு உள்ளது. இருந்தாலும் தமிழகத்தில் தற்போது ஒரு சில புதிய மின்உற்பத்தி நிலையங்களும் சோதனை ஓட்டத்தை எட்டி உள்ளன.
போதிய மின்சாரம் கிடைக்க வாய்ப்பு...
இவை அனைத்தும் வணிக ரீதியான உற்பத்தியை எட்டிவிட்டால் போதிய மின்சாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மொத்த உற்பத்தியும் 10 ஆயிரத்தை தாண்டி உள்ளன. குறிப்பாக கடந்த 16-ந்தேதி இரவு 7.05 மணிக்கு 11,240 மெகாவாட்டும், 17-ந்தேதி 10,708 மெகாவாட்டும், நேற்று 10,040 மெகாவாட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
மரபுசாரா எரிசக்தி ஆதாரங்கள்
அனல்மின்நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி போதுமானதாக கிடைக்காததால் மாற்று வழிகளில் மின்சாரம் தயாரிப்பதற்கான ஆலோசனைகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சூரியசக்தி, காற்றாலைகள், காகிதம் மற்றும் குப்பைகளை எரித்து மின்சாரம் தயாரிப்பது போன்ற பல்வேறு மரபுசாரா எரிசக்திகளையும் ஊக்குவிக்கப்படுகிறது.
இலக்கு நிர்ணயம்
குறிப்பாக 2012-ம் ஆண்டு நாடு முழுவதும் மரபுசாரா எரிசக்தி மூலம் மின்உற்பத்தி திறன் 25 ஆயிரம் மெகாவாட்டாக இருந்தது. இவற்றை மேலும் அதிகரிக்கும் வகையில் 2017-ம் ஆண்டில் 55 ஆயிரம் மெகாவாட்டாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றில் மரபுசாரா எரிசக்தி ஆதாரங்கள் முற்றிலும் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.