கூத்தாண்டாவர் கோவில் திருவிழா: நாளை மிஸ் கூவாகம் அழகிப் போட்டி
விழுப்புரம்: கூத்தாண்டவர் கோவில் திருவிழாவின் முக்கிய அம்சமான திருநங்கைகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சியும், மிஸ் கூவாகம் போட்டியும் நாளை நடைபெற உள்ளது.
லட்சக்கணக்கான திருநங்கைகள் கூடும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. கொடியேற்றுதல் தொடங்கி, தாலி கட்டுதல், அரவாண் களப்பலி போன்ற முக்கிய நிகழ்வுகள் நடைபெறும்.
ஆண்டுதோறும் சித்திரை பவுர்ணமியை ஒட்டி நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான திருநங்கைகள் கூவாகத்தில் திரள்வார்கள்.
மிஸ் கூவாகம் யார்
கூத்தாண்டாவர் கோவில் திருவிழாவிற்கு வரும் திருநங்கைகளுக்காகவே மிஸ் கூவாகம் போட்டி நடத்தப்படுகிறது. இதற்காக அழகாக அலங்கரித்துக் கொண்டு மேடையில் ஒய்யார நடை போடுவார்கள் திருநங்கைகள்.
தாலி கட்டிக்கொள்ளுதல்
கூவாகம் விழாவின் முக்கிய நிகழ்வான தாலி கட்டிக்கொள்ளுதல் நாளை (ஏப்ரல் 23ம் தேதி) இரவு நடைபெறுகிறது. இதில் மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட இந்தியா முழுவதிலும் இருந்து வரும் திருநங்கைகள் பூசாரிகளின் கையால் தாலிக் கட்டிக்கொண்டு இரவு முழுவதும் கும்மியடித்து மகிழ்வர். முன்னதாக சுவாமிக்கு திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெறும்.
அரவாண் களப்பலி
காலை 6.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து பகல் 12 மணிக்கு நடக்கும் அழுகளம் நிகழ்ச்சியில் திருநங்கைகள் தாங்கள் அணிந்திருந்த தாலிகளை அறுத்தெறிந்து விதவைக் கோலம் பூண்டு அப்பகுதியிலுள்ள கிணற்றில் குளித்து விட்டு தங்கள் ஊருக்கு திரும்புவர்.
திருநங்கைகளுக்கு பாதுகாப்பு
பல்வேறு நிகழ்வுகளுக்குப் பின்னர் தர்மர் பட்டாபிஷேகத்துடன் ஏப்ரல் 26ம் தேதி விழா நிறைவடைகிறது. இந்த விழாவிற்கு வரும் திருநங்கைகளை பலரும் தவறான நோக்கத்துடன் அணுகுவதாக புகார் எழுந்துள்ளது. எனவே விழா நேரத்தில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது திருநங்கைகளின் கோரிக்கையாகும்.