வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு.. 6 மாதங்களில் 5க்கும் மேல் பலி.. என்ன காரணம்?
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த மணி என்ற ஆண் சிங்கம் வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள், பறவைகள் என 170-க்கு மேற்பட்ட வன உயிரினங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதனை தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர்.
இதனிடையே கொரோனா வைரஸ் 2வது அலை காரணமாக சில மாதங்கள் பூங்கா மூடப்பட்டது. பூங்கா ஊழியர்கள் மட்டுமே உள்ளே சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதில் நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் கடந்த ஆண்டு உயிரிழந்தது. இதனால் மற்ற சிங்கங்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தன.
முன்னதாக கவிதா என்ற சிங்கம் உடல்நிலை பிரச்சனை காரணமாக உயிரிழந்தது. இதனால் பல்வேறு சமூக அமைப்புகளும் மிருகங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். தொடர்ந்து கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், மீண்டும் பூங்காவில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனைத்தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் 5 வயதான விஷ்ணு என்ற சிங்கம் உணவுக்குழாய் பிரச்சனையால் இறந்தது. இந்தநிலையில், வயது மூப்பு காரணமாக 32 வயதாகும் மணி என்ற ஆண் சிங்கம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பூங்கா இயக்குநர் சீனிவாச ரெட்டி கூறுகையில், கடந்த 2000ஆம் ஆண்டில் கள்ளக்குறிச்சி சிறு பூங்காவில் இருந்து மீட்கப்பட்ட மணி என்ற 32 வயதான ஆண் சிங்கம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது வயது முதிர்வால் அந்த சிங்கம் உயிரிழந்தது என்று தெரிவித்துள்ளார். வண்டலூர் பூங்காவில் கடந்த 6 மாதங்களில் 5க்கும் மேற்பட்ட சிங்கங்கள் உயிரிழந்துள்ளதாகவும், தற்போது 10 சிங்கங்கள் மட்டுமே இருப்பதாகவும் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே வண்டலுார் உயிரியல் பூங்காவில், பல்வேறு நிலைகளில் நிரந்தர பணியாளர்களாக 75 பேரும், தினக்கூலி பணியாளர்களாக 200க்கும் மேற்பட்டோரும் பணியாற்றுகின்றனர். அதில் தினக்கூலி பணியாளர்களுக்கு, பூங்கா நிர்வாகம் மாதந்தோறும், சம்பளம் வழங்கி வருகிறது. இவர்களை, பூங்கா நிர்வாகம் தனியார் நிறுவனத்தின் கீழ் பணியமர்த்த முடிவு செய்து, அதற்கான பணிகளை துவக்கி உள்ளது.
இதை கண்டித்து, ஊழியர்கள் பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பூங்கா ஊழியர்களின் பிரச்னைகளை வேகமாக களைந்து, விலங்குகளின் உயிரிழப்பை கட்டுப்படுத்த பூங்கா நிர்வாகம் நடவடிக்கை என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.