முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்- நினைவுகளை யார் அழிப்பார்? -சுப. வீரபாண்டியன்
சென்னை: முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளை பேராசிரியர் சுப. வீரபாண்டியன் தமது சமூக வலைதளப் பக்கங்களில் நினைவுகளை யார் அழிப்பார்? என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளார்.
பேராசிரியர் சுப. வீரபாண்டியனின் பதிவு:
மே 18 -
முள்ளிவாய்க்காலில் ஓர் இனப்படுகொலை
முற்றி வெடித்த நாள்!
திட்டமிட்டும் கட்டமைத்தும் நடந்த
இனப்படுகொலையின் இறுதிநாள்!
மே 18 -
புலிகளின் துப்பாக்கிகள் மௌனித்த நாள்
மவுனத்தின் அலறல் கேட்டும் உலக நாடுகளின்
செவிப்பறைகள் செவிடாகிப்போன நாள்!
புலிகள் -
மூன்று தலைமுறையாய்க் களத்தில் நின்றார்கள்
மூன்று படைகளையும் தம் வசத்தில் கொண்டார்கள்!
புலிகளின் புகழ்
உலகெங்கும் எழுந்தது ! அதனால்
உலகின் பார்வை அவர் மேல் விழுந்தது
ஒரு தேசம் விடுதலை பெற்றால்
உலகெலாம் விடுதலைப் போர் எழும் என்பதால்
உலக நாடுகள் ஒருங்கிணைந்து
ஒடுக்கி அழித்தன நம் இனத்தை!
ஆண்டுகள் 12 கடந்து போயின
ஆயினும் ஆறாத ஆயிரம் ரணங்கள்!
நினைவுத் தூணையும் நேற்று அழித்தனர்.
நினைவுத் தூண்களை அழிக்கலாம்
நினைவை யாரால் அழித்திட முடியும்?