கோவையில் முதல்வர் ஸ்டாலின் போட்டியிட்டால்...நைசாக வானதி சீனிவாசனை கோர்த்துவிட்ட சிபி ராதாகிருஷ்ணன்!
கோவை: சட்டசபை தேர்தலில் கோவை மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்டால் அவரை பாஜக எம்.எல்.ஏ.வானதி சீனிவாசன் நிச்சயம் தோற்கடிப்பார் என்று அக்கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது.
அமெரிக்காவையே கதற விட்ட நபர்.. எட்வர்ட் ஸ்னோடனுக்கு ரஷ்ய குடியுரிமை.. புடினின் மாஸ் முடிவு!
தமிழக சட்டசபை தேர்தலின் போது கோவை தெற்கு தொகுதி நட்சத்திர தொகுதியாக கவனம் ஈர்த்தது. இத்தொகுதியி மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான வானதி சீனிவாசன் களமிறங்கினார். சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவின் போது கடும் இழுபறி நிலவிய தொகுதிகளில் இதுவும் ஒன்று. கடைசியில் மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் வெற்றி பெற்றார்.
பாஜக ஆர்ப்பாட்டம்
இந்நிலையில் கோவையில் நேற்று பாஜக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சூத்திரர்கள் குறித்து மனுஸ்மிருதியில் எழுதப்பட்டதை சுட்டிக்காட்டி பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவை கண்டித்தும் பாஜகவினர் கைது செய்யப்படுவதைக் கண்டித்தும் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
ஆ.ராசாவால் முடிவுரை
இந்த பாஜக ஆர்ப்பாட்டத்தில் வானதி சீனிவாசன் குறித்து அக்கட்சி மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: திமுகவுக்கு ஆ.ராசாவால்தான் முடிவுரை எழுதப்பட இருக்கிறது என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும். சட்டசபை தேர்தலின் போது கமல்ஹாசனை வானதி சீனிவாசன் ஜெயிக்க முடியுமா? என கேட்டீர்கள்.
ஸ்டாலினை தோற்கடிப்பார்
கமல்ஹாசன் அல்ல..அந்த ஸ்டாலினே வந்து நம்முடைய கொங்கு மண்டலத்தில் நிற்பார் என்று சொன்னால், ஸ்டாலினையே இதே வானதி தோற்கடித்துக் காட்டுவார். அதுதான் பாரதிய ஜனதா கட்சி. திமுகவின் பலவீனமே ஒன்றைச் சொல்வார்கள். இன்னொன்றை செய்வார்கள்.. அதுதான் அந்த கட்சியின் பலவீனம்.
திமுகவின் மாறிய நிலைப்பாடுகள்
சட்டசபை தேர்தலின் போது பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம்; கேஸ் விலையை குறைப்போம் என்றார்கள். மத்திய அரசு சம்பந்தப்பட்டது இது என்ற போது நாங்கள் குறைப்போம் என்றார்கள். ஆனால் சட்டசபை தேர்தலுக்கு பின்னர் எதனையும் செய்யவில்லை. இந்தி திணிப்புக்கு எதிராக அரசியல் சட்டத்தை எரிக்கிறோம் என்றார்கள். கருணாநிதி, அன்பழகன் உள்ளிட்டோர் அரசியல் சட்ட நகலை எரித்தோம் என்றார்கள். அவர்களது எம்.எல்.ஏ. பதவியை பறிக்க பி.எச். பாண்டியன் நடவடிக்கை எடுத்த போது, நீதிமன்றத்தில் வெறும் பேப்பரைத்தான் எரித்தோம் என பதில் சொன்னவர் கருணாநிதி. இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார். இந்தக் கூட்டத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்றனர்.