அத்துமீறிய சீனா-விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் 17 கட்சிகளின் எம்.பிக்கள் கூட்டாக வெளிநடப்பு!
டெல்லி: அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா அத்துமீறி ஊடுருவ முயன்ற விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் லோக்சபா, ராஜ்யசபாவில் 17 எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் கூண்டோடு வெளிநடப்பு செய்தனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த 5 நாட்களாக பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபடுவதால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
இதனிடையே அருணாச்சல பிரதேசம் தவாங் செக்டாரில் 300க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் அத்துமீறி ஊடுருவி நமது நிலப் பகுதிகளை ஆக்கிரமிக்க முயன்றனர். இதனை நமது வீரர்கள் கடுமையாக எதிர்த்து போராடி விரட்டியடித்தனர்.
நாடாளுமன்றத்தில் சீனாவின் அத்துமீறல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று நேற்றும் இன்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தின. ஆனால் நாடாளுமன்றத்தில் நேற்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், சீனாவின் அத்துமீறல் தொடர்பாக அறிக்கை மட்டும் தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், கடந்த 9-ந்தேதியன்று அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பிரிவில் நமது எல்லையில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி இந்த அவையில் விவரிக்க விரும்புகிறேன். 9-ம் தேதியன்று, சீனாவின் பிஎல்ஏ துருப்புக்கள் தவாங் பிரிவின் யாங்ட்சே பகுதியில் உள்ள எல்லைக் கோட்டை மீறி, தன்னிச்சையாக தற்போதைய நிலையை மாற்ற முயன்றனர். சீன முயற்சியை நமது துருப்புக்கள் மிக உறுதியான முறையில் எதிர்கொண்டன. அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதல் மற்றும் கைகலப்பில், பிஎல்ஏ நமது எல்லைக்குள் அத்துமீறி நுழைவதை இந்திய ராணுவம் துணிச்சலாகத் தடுத்தது. இதனால் அவர்கள் தங்கள் நிலைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த மோதலில் இரு தரப்பிலும் சிலருக்கு காயம் ஏற்பட்டது. நமது தரப்பில் உயிரிழப்புகளோ, கடுமையான காயமோ ஏற்படவில்லை என்பதை இந்தச் சபையுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
குறைத்து மதிப்பிட்ட சீனா! திருப்பி அடிக்கும் இந்தியா! எல்லை மோதலுக்கு என்ன காரணம்! எளிய விளக்கம் இதோ
இந்திய ராணுவத் தளபதிகளின் சரியான நேரத் தலையீடு காரணமாக, பிஎல்ஏ வீரர்கள் தங்கள் நிலைகளுக்குத் திரும்பிச் சென்றனர். சம்பவத்தின் தொடர்ச்சியாக, அப்பகுதியில் உள்ள நமது உள்ளூர் தளபதி 11ந்தேதி அன்று எதிர்த் தரப்பினருடன், நிறுவப்பட்ட வழிமுறைகளுக்கு இணங்க பிரச்சினையை விவாதிக்க ஒரு கூட்டத்தை நடத்தினார். இதுபோன்ற செயல்களில் ஈடுபடாமல் தவிர்த்து, எல்லையில் அமைதியையும், இணக்கமான சூழலையும் நிலைநாட்ட சீனத் தரப்புக் கேட்டுக் கொள்ளப்பட்டது. தூதரக வழிமுறைகள் மூலமும் சீனத் தரப்பிடமும் இந்தப் பிரச்சினை எடுத்துச் செல்லப்பட்டது. நமது படைகள் நமது பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ளன என்றும், அதன் மீது மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் முறியடிக்கும் நடவடிக்கையைத் தொடரும் என்றும் நான் இந்த அவையில் உறுதியளிக்க விரும்புகிறேன். நமது ராணுவ வீரர்களின் துணிச்சலான முயற்சிக்கு உறுதுணையாக இந்த முழு அவையும் ஒன்றுபட்டு நிற்கும் என்று நான் நம்புகிறேன். ஜெய் ஹிந்த்! என கூறியிருந்தார். ஆனால் இந்த அறிக்கையைத் தொடர்ந்து விவாதிக்க வலியுறுத்தின எதிர்க்கட்சிகள். இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சித் தலைவரும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் 17 எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாடாளுமன்றத்தில் சீனா விவகாரத்தில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது என முடிவெடுக்கப்பட்டது. பின்னர் நாடாளுமன்றம் கூடிய போது இருசபைகளிலும் சீனாவின் அத்துமீறல் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். ஆனால் இருசபைகளிலும் விவாதங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, எதிர்க்கட்சிக எம்.பிக்களின் தொடர் அமளிக்கு கடும் எதிர்ப்பும் அதிருப்தியும் தெரிவித்தார். ஆனாலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் அமளியைத் தொடர்ந்தனர். ஒருகட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் லோக்சபாவில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதேபோல் ராஜ்யசபாவிலும் 17 எதிர்க்கட்சிகளின் எம்.பிக்களும் கூட்டாக வெளிநடப்பு செய்தனர்.