பயங்கரவாத தொடர்பு..பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இணையதளம் முடக்கம்..மத்திய அரசு அதிரடி
டெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு ஐந்தாண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அந்த அமைப்பின் இணைய தளமும் முடக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (PFI) அமைப்புக்கு நாடு முழுவதும் 24 மாநிலங்களில் கிளைகள் உள்ளன. பல்வேறு கலவரங்கள், படுகொலைகளில் இந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதன்பேரில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 22ஆம் தேதி திடீர் சோதனை நடத்தினர். அப்போது 45 பேர் கைது செய்யப்பட்டனர். முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
பாகிஸ்தானில் கட்டாய மதமாற்ற சம்பவம்.. குட்டு வைத்த இந்தியா.. அமைச்சர் ஜெய்சங்கர் பரபர அட்டாக்
போராட்டங்கள்
இந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்து இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் நடைபெற்ற மாநிலம் தழுவிய பந்த் வன்முறையாக மாறியது. சென்னையில் புரசைவாக்கத்தில் உள்ள இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் கைது செய்யப்பட்டனர்.
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா
வங்கிகளில் பிஎஃப்ஐ அமைப்பு ரூ.120 கோடி டெபாசிட் செய்திருப்பதும், வளைகுடா நாடுகளில் இருந்து ஹவாலா முறையில் அதிக அளவிலான தொகையை கொண்டு வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், நாடு முழுவதும் 2வது முறையாக பிஎஃப்ஐ அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் நேற்று சோதனை நடத்தப்பட்டது.
நாடு முழுவதும் சோதனை
டெல்லி, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா, அசாம் ஆகிய 8 மாநிலங்களில் 8 மணி நேரத்துக்கும் மேலாக இந்த சோதனை நீடித்தது. தலைநகர் டெல்லியில் ஷாகின்பாக், ஜாமியா நகர் பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள், டெல்லி சிறப்பு படை போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கையாக இந்த பகுதிகளில் 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
5 ஆண்டுகள் தடைவிதிப்பு
இந்தநிலையில் தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு ஐந்தாண்டுகள் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த தடை அமல் உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மட்டுமல்ல, அதன் துணை அமைப்புகள் மற்றும் அதற்கு உதவும் அமைப்புகளுக்கும் ஐந்து வருடம் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் உஷார் நிலை
இந்நிலையில் மேற்கொண்டு அசம்பாவிதங்கள் ஏற்படாத வகையிலும், போராட்டங்கள் நடைபெறாத வகையிலும் தடுக்க தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அரசின் தடை உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற உள்ளதாக உளவுப் பிரிவு முன்னதாக அறிவுறுத்தியுள்ள நிலையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் வலுவாக உள்ள இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் புரசைவாக்கம் மூக்காத்தாள் தெருவில் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அலுவலகம் முன்பும், மண்ணடி, திருவல்லிக்கேணி, ஐஸ் அவுஸ், ஜாம் பஜார் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இணைய தளம் முடக்கம்
இந்த நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் இணைய தள பக்கத்தினை மத்திய அரசு முடக்கியுள்ளது. பயங்கரவாத தொடர்ப்பு காரணமாக 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட நிலையில் இணைய தள பக்கத்தையும் மத்திய அரசு முடக்கி உத்தரவிட்டுள்ளது.