பயணிகளுக்கு முக கவசம், வெப்ப பரிசோதனை கட்டாயம்- மெட்ரோ ரயில் சேவைக்கான வழிகாட்டு முறைகள் வெளியீடு
டெல்லி: மெட்ரோ ரயில் சேவைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அனைத்து பயணிகளுக்கும் முக கவசம், வெப்ப பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் பெருமளவில் தளர்த்தப்பட்டுவிட்டன. பெரும்பாலான மாநிலங்களில் பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் செப்டம்பர் 7-ந் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவைகளும் இயக்கப்பட உள்ளன. இதனையடுத்து இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிட்டது.
அதில், கொரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்கள் திறக்கப்படமாட்டாது; அனைத்து பயணிகளும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருப்பதை மெட்ரோ ரயில்சேவை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் ஒவ்வொரு பயணிக்கும் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. மெட்ரோ ரயில் சேவைகள் இயக்கத்தின் போது சமூக இடைவெளிகள் பின்பற்றப்படும்; கொரோனா அறிகுறி இல்லாத நபர்களை மட்டுமே மெட்ரோ ரயிலில் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications