விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு: டெல்லி ராம்லீலாவில் இன்று காங்கிரஸ் போராட்டம்
டெல்லி: விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக மத்திய அரசை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய போராட்டம் நடத்துகிறது.
நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது என்றும், அத்தியாவசிய பொருட்களுக்கு கூட ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது என்று பாஜனதா மீது காங்கிரஸ் குற்றம் சாட்டி வந்தது.
மேலும் நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாகவும் காங்கிரஸ் கூறி வந்தது.
திமுக-காங்கிரஸ் கூட்டணியை உடைக்க ஆர்எஸ்எஸ் சதி... கே.எஸ்.அழகிரி பகிரங்க குற்றச்சாட்டு
மிகப்பெரிய போராட்டம்
இந்த நிலையில், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி உயர்வு உள்ளிட்டவை தொடர்பாக மத்திய அரசை கண்டித்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய போராட்டம் நடத்துவதாக அறிவித்தது. இந்த போராட்டத்தில் டெல்லி, அரியானா, உத்தர பிரதேசத்தில் உள்ள தொண்டர்கள், முக்கிய தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் பல்வேறு தலைவர்களுக்கும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளவும் அழைப்பு விடுக்கப்பட்டது.
ராகுல் காந்தி தலைமையில்
இந்த போராட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடக்க உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார். அவர் விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசை கண்டித்து பேசுவார் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் வெளிநாட்டில் இருப்பதால் இந்த போராட்டத்தில் அவர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள்.
நாடு முழுவதும் நடைபயணம்
இந்த போராட்டம் குறித்து காங்கிரஸ் தரப்பில் கூறுகையில், ''கடந்த 2014-ம் ஆண்டுக்கு பின்னர் விலை வாசி மிகவும் அதிகரித்துள்ளது. இதனால் ஏழை மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பட்டுள்ளது. எனவே இதை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் நடத்துகிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதே கோரிக்கையை முன்வைத்து ராகுல் காந்தி நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொள்வதாகவும் கூறப்பட்டது.
பாரத் ஜோடா யாத்திரை
ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீசச்ர் வரை நடைபயணம் (பாரத் ஜோடா யாத்திரை) மேற்கொள்கிறார். மொத்த 3,500 கிமீ தூரம் நடந்தே சென்று ஏழை எளிய மக்களை சந்தித்து அவர்களிடம் தற்போதுள்ள நிலைமையை கூறவும், அவர்களது நிலைமை குறித்து அறிந்து கொள்ள முடிவதாகம் கூறப்பட்டது. மேலும் இந்த நடைபயணமானது வருகிற 7-ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.