சீனாவில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள்.. மீட்க அரசு தீவிர முயற்சி.. இந்தியா வந்தாலும் ஒரு சிக்கல்
Recommended Video
டெல்லி: சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் வுஹானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை வெளியுறவுத்துறை அமைச்சகம் தீவிரப்படுத்தி உள்ளது.
சீனா பகுதியில் இருந்து இந்தியா திரும்ப காத்திருப்போர் மத்திய அரசைத் தொடர்பு கொள்ளும் வகையில் ஹாட்லைன் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையில் சீனாவில் இருந்து இந்தியா அழைத்து வரப்படுவோர், 14 நாட்கள் தனியாக மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக குடும்பத்தாருடன் அவர்களால் வசிக்க முடியாது.
சீனாவின் சிக்கி தவிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீபன் என்பவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவரது குடும்பத்தாரிடம் வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. ஆராய்ச்சி மாணவரான இவர், வுஹானில் சிக்கி இருக்கிறார்.

திரிபுராா இளைஞர்
இதனிடையே, திரிபுராவை சேர்ந்த ஒரு இளைஞர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மலேசியாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இது குறித்து மலேசிய மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கொரோனா பாதிப்பால் அந்த வாலிபர் பலியானாரா என்பது குறித்து ஆய்வு நடக்கிறது.

சீனா நிலை
இதனிடையே, சீனாவில், கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12567 பேருக்கு வைரஸ் தாக்கம் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சிகிச்சை பெற்று நலமடைந்த 124 பேர் வீடு திரும்பியுள்ளனர். 1947 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாக சீனா கூறியுள்ளது.

விமான சேவைகள்
சீனாவில் உள்ள 31 மாகாணங்களிலும் வைரஸ் தாக்கம் உள்ளதால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, தாய்லாந்து, ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட 17 நாடுகளில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்திய விமான நிறுவனங்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மோசம்
சீனாவின் பல பகுதிகளுக்கும் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் வேகமாக ரத்து செய்யப்படுகிறது. எனவே பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 20-ம் தேதி வரை விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக முன்னணி விமான சேவை நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. ஏர் கனடா விமான நிறுவனங்கள் தங்களின் சீனாவுக்கான சேவையை ரத்து செய்துள்ளன. இதனால் சீனாவில் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications