3 மணி நேரம் நடந்த காரசார வாத விவாதம்.. திஷா ரவி ஜாமீன் வழக்கு 23ம் தேதிக்கு ஒத்திவைப்பு
டெல்லி: சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி ஜாமீன் மனு டெல்லி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பின் காரசார விவாதங்களுக்கு பிறகு, வழக்கு விசாரணை 23ம் தேதியான செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் கிரெட்டா தன்பெர்க் பதிவு செய்த டூல்கிட்டை பெங்களூரை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் திஷா ரவி எடிட் செய்து பரப்பியதாக டெல்லி காவல்துறை குற்றம்சாட்டுகிறது.
இதுதொடர்பாக திஷா ரவியை கைது செய்த காவல்துறையினர் டெடல்லி அழைத்துச் சென்றனர். முதல்கட்டமாக அவருக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் விதித்தது நீதிமன்றம்.
இந்த நிலையில் நேற்று அவரது போலீஸ் காவல் நிறைவடைந்த நிலையில் மீண்டும் பட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவருக்கு மூன்று நாள் நீதிமன்ற காவல் விதித்தது நீதிமன்றம்.
ஆனால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று திஷா ரவி தாக்கல் செய்துள்ள மனு பாட்டியாலா நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்திர ராணா முன்னிலையில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பு மற்றும் திஷா ரவி தரப்பின் வாதங்களை விரிவாக கேட்டறிந்தார் நீதிபதி.
இருப்பினும், இன்று திஷா ரவிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. பிப்ரவரி 23 செவ்வாய்க்கிழமைக்கு வழக்கை நீதிபதி ஒத்தி வைத்தார்.
திஷா ரவி டூல்கிட்டுக்கும் டெல்லி கலவரத்திற்கும் தொடர்பு இருக்கிறதா? ஆதாரம் எங்கே.. நீதிமன்றம் கேள்வி
போலீஸ் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜு, திஷா ரவிக்கு ஜாமீன் வழங்கப்பட்டால், அவர் ஆதாரங்களை அழித்துவிட வாய்ப்பு உள்ளது என்றார்.
ரவி தனது சொந்த தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் குழுவை உருவாக்கினார். கிரெட்டா துன்பெர்க்குடன் ட்வீட் செய்ய அவர் அதைப் பயன்படுத்தினார். 3/2/2021 அன்று கிரெட்டாவின் ட்வீட் காரணமாக இந்த சதி கண்டுபிடிக்கப்பட்டது.
தெரியாத்தனமாக டுவிட்டரில் சதி ஆவணத்தை கிரெட்டா பகிர்ந்துவிட்டதால் பயந்து போன திஷா அதை நீக்க கிரெட்டாவிடம் வலியுறுத்தினார். அது மிகவும் தீங்கற்றதாக இருந்தால், கிரெட்டா துன்பெர்க்கை ஏன் நீக்கச் சொன்னார்? இந்த டூல்கிட் பின்னால் ஒரு மோசமான திட்டம் இருந்ததை இது காட்டுகிறது." என்று வாதிட்டார்.
ஆனால் டூல்கிட்டுக்கும் டெல்லி கலவரத்திற்கும் நேரடி தொடர்பு உள்ளதா என்று நீதிபதி கேட்டபோது, போலீஸ் இன்னும் அதுகுறித்து விசாரித்து வருவதாக ராஜு வாதிட்டார். இந்த நிலையில், வழக்கு 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தேசத் துரோகம் உள்ளிட்ட வழக்குகளில் பிரிவுகளின் கீழ், திஷா ரவிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிர் கட்சி தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.