மறக்கமுடியாத மே 22, 2018.. மகிழ்ச்சியளித்த பிப்.18, 2019.. ஸ்டெர்லைட் வழக்கில் நடந்தது என்ன?
டெல்லி:பெரும் எதிர்ப்பார்புகளுக்கு இடையே ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பான இறுதி தீர்ப்பளித்துள்ளது. தமிழகமே பெரிதும் எதிர்பார்த்த இந்த வழக்கு பல்வேறு முக்கிய கட்டங்களை கடந்து வந்துள்ளது.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, கடந்த மே மாதம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்த... 13 பேர் கொல்லப்பட்டனர்.
அதனை தொடர்ந்து, கடந்த மே மாதம் 28ம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. இதையடுத்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார்.
பசுமை தீர்ப்பாயம்
தமிழக அரசின் தடைக்கு எதிராக வேதாந்தா நிறுவனமானது, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு ஒன்றை அமைத்தது.
தமிழக அரசு மனு
இதனிடையே, பசுமை தீர்ப்பாயத்தின் விசாரணைக்கு தடை கோரி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால், ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாய விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்ற உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்தது.
தமிழக அரசின் மனு தள்ளுபடி
ஆனால்.. அதனை ஆய்வு செய்யக்கோரி செப்டம்பர் 14ம் தேதி உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது.அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் விவகாரத்தை தொடர்ந்து விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அனுமதி அளித்து தமிழக அரசின் சீராய்வு மனுவையும் தள்ளுபடி செய்தது.
தருண் அகர்வால் குழு
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த தருண் அகர்வால் குழு, 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 28ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது. சில நிபந்தனைகளுடன் மீண்டும் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என அறிக்கையில் தெரிவிக்கப் பட்டது.
கேவியட் மனு
அதனை ஏற்றுக் கொண்ட தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கும் உரிமத்தை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் புதுப்பித்து வழங்க வேண்டுமென்று கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி உத்தரவிட்டது. தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய முடிவு செய்த நிலையில், டிசம்பர் மாதம் 17ம் தேதியன்று, வேதாந்தா நிறுவனம் சார்பில் உச்ச நீதி மன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பேராசிரியை வழக்கு
மேலும், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்கும் என்று உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு பிறப்பித்தது.
மேல்முறையீடு மனுக்கள்
உயர் நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்தது. இதனையடுத்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக, கடந்த மாதம் 2ம் தேதி தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
தடை விதித்த உச்ச நீதிமன்றம்
இரு மனுக்களையும் விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக்கிளை வழங்கிய உத்தரவிற்கு தடை விதித்ததோடு, தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவே நடைமுறையில் இருக்கும் என்றும் உத்தரவிட்டது. இந்த நிலையில், ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டுமென கடந்த மாதம் 22ம் தேதி, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இடைக்கால உத்தரவு இல்லை
அந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 24ம் தேதி நடைபெற்றபோது ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டுமென தமிழக அரசு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் வாதிட்டனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றத்தில் வாதம்
தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்த தருண் அகர்வால் குழு தாக்கல் செய்த அறிக்கையும், அங்குள்ள சூழலும் எதிர்மறையாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை அமல்படுத்தி ஆலையை திறக்க அனுமதிக்குமாறு, வேதாந்த நிறுவனம் வாதிட்டது.
இறுதி தீர்ப்பு வெளியானது
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பாலி நாரிமன், வினீத் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும், ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவு ரத்து செய்யப்பட்டதாகவும் இறுதி தீர்ப்பு வழங்கியுள்ளது.