எல்லையில் பதற்றம்.. 12 மணி நேரத்திற்கு மேல் நீடிக்கும் சமரச பேச்சுவார்த்தை.. சுமூகம் எட்டவில்லை?
டெல்லி: எல்லையில் பதற்றத்தை தணிக்க கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தை 12 மணி நேரத்தை கடந்து நீடித்து வருகிறது என்றும் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கிழக்கு லடாக் பகுதியில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று 3ஆவது கட்டமாக ராணுவ கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
நேற்று காலை 11 மணிக்கு சுச்சூல் பகுதியில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் 14 கார்ப்ஸ் கமாண்டர் லெப்ட்னினட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மற்றும் தெற்கு ஜின்ஜியாங் ராணுவத்தின் தலைமை மேஜர் லியூ லின் ஆகியோர் இருந்தனர்.
எல்லையில் பதற்றத்தைத் தணிக்க நடத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தை 12 மணி நேரத்தை கடந்து நடந்து கொண்டிருக்கிறது என்றும் இதில் எந்த வித முன்னேற்றமும் இல்லை என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த பேச்சுவார்த்தை குறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில் கால்வன் பகுதியில் இந்தியா வசம் உள்ள பகுதிகளுக்கு சீனா புதிதாக உரிமை கோருவது குறித்து இந்திய தரப்பு கவலை தெரிவித்தது.
கொரோனா போல பெருந்தொற்றாக மாற வாய்ப்புள்ள புதிய வைரஸ்.. சீன பன்றிப் பண்ணைகளில் கண்டுபிடிப்பு.. ஷாக்
நிலைமையை மீட்டெடுக்க கால்வன் பள்ளத்தாக்கு, பாங்காங் சோ ஏரி மற்றும் பல பகுதிகளில் உள்ள சீன துருப்புகளை திரும்ப பெற வேண்டும் என இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் இந்த பேச்சுவார்த்தை 12 மணி நேரத்தை கடந்து நடைபெற்று வருவதாக தெரிகிறது. இதை பார்க்கும்போது பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றே தெரிகிறது.
ஏற்கெனவே மால்டோ பகுதியில் ஜூன் 6 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இரு முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் 3ஆவது கட்ட பேச்சுவார்த்தை சுச்சூல் பகுதியில் முதல்முறையாக நேற்று நடைபெற்றது.