'5ஆவது முறை..'ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு வேக்சின்.. இந்தியா தொடர்ந்து சாதிப்பது எப்படி
டெல்லி: இந்தியாவில் 5ஆவது முறையாக நேற்று ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை நாட்டில் 86 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த 1.5 ஆண்டுகளுக்கு மேலாக உலக நாடுகளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது கொரோனா வைரஸ் தான். வல்லரசு நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்தும் கொரோனாவை எதிர்கொள்ள பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது.
இந்தச் சூழலில் தடுப்பூசிகள் மட்டுமே கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. வேக்சின் பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நாடுகளில் உயிரிழப்புகள் பெரியளவில் குறைந்துள்ளதே இதற்குச் சாட்சி. இதன் காரணமாக அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளுக்கு அதிகபட்ச முக்கியத்துவம் அளித்து வருகின்றன.
3வது அலை.. நாட்டில் இதுவரை 86 கோடி பேருக்கு தடுப்பூசி.. கடந்த 24 மணிநேரத்தில் 38,18,362 தடுப்பூசிகள்
வேக்சின் பணிகள்
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி வேக்சின் பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் முன்களப் பணியாளர்களுக்கு மட்டுமே வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், பின்னர் அது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதுக்கு மேல் இணை நோய் உள்ளவர்களுக்குத் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டன. அதன் பிறகு ஏப்ரல் 1ஆம் தேதி 45 வயதுக்கு மேலானவர்களுக்குத் தடுப்பூசி பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. மே 1ஆம் தேதி முதல் நாட்டில் உள்ள 18+ அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.
வேக்சின் பற்றாக்குறை
கொரோனா வேக்சினுக்கு ஏற்பட்டிருந்த பற்றாக்குறை காரணமாக முதல் சில மாதங்கள் வரை வேக்சின் பணிகள் மந்தமாகவே நடைபெற்று வந்தது. இருப்பினும், கடந்த மாதம் வேக்சின் பற்றாக்குறை முடிவுக்கு வந்தது. அதேநேரம் தற்போதும் கூட பல்வேறு இடங்களில் கோவாக்சின் பற்றாக்குறை தொடர்கிறது. இதனால், பல்வேறு மாநிலங்களும் கோவாக்சின் முதல் டோஸை போடுவதை நிறுத்திக் கொண்டன. கடந்த ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னரே, தடுப்பூசி பணிகள் மெல்ல வேகம் பெறத் தொடங்கியது. அதன் பின்னர் 4 தினங்கள் இந்தியாவில் ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு வேக்சின் போடப்பட்டது.
5ஆவது நாள்
அதேபோல 5ஆவது நாளாக நேற்றும் இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு வேக்சின் போடப்பட்டது. இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தனது ட்விட்டர் பக்கத்தில், "வாழ்த்துகள், மேலும் ஒரு முறை ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் 5ஆவது முறையாக இந்தியா ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளைப் போட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
Recommended Video
86 கோடிக்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசி
இந்தியாவில் முதல்முறையாகக் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி ஒரு கோடிக்கும் அதிகமானோருக்குத் தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு நேற்றுடன் சேர்ந்து மொத்தம் 5 நாட்கள் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 2.5 கோடி பேருக்கு வேக்சின் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதுவரை 86 கோடி வேக்சின்கள் போடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து இந்தியர்களுக்கும் வேக்சின்களை போட வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி குறித்த அச்சம் மக்களிடையே இருக்கும் நிலையில், அதை போக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் எழுந்துள்ளது.