80 நாட்களுக்குப் பின் பெரும்பாலான வழிபாட்டுத் தலங்கள் திறப்பு- நீண்டவரிசைகளில் காத்திருந்து வழிபாடு!
டெல்லி: கொரோனா லாக்டவுனால் 80 நாட்களாக மூடப்பட்டிருந்த வழிபாட்டுத் தலங்கள் நாட்டின் பல்வேறு இடங்களில் திறக்கப்பட்டன. இதேபோல் ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கான கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன.
Recommended Video
கொரோனா லாக்டவுனால் நாட்டின் அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டன. அதேநேரத்தில் கோவில்களில் முக்கியமான பூஜைகளை அர்ச்சகர்கள் மட்டும் நடத்தவும் அனுமதிக்கப்பட்டன.
இந்த நிலையில் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் இன்று முதல் 80 நாட்களுக்குப் பின்னர் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.
கடைகளுக்கு செல்ல இத்தனை ரூல்ஸா.. தமிழகத்தில் இன்று முதல் அமலாகும் புதிய "அன்லாக்" விதிகள்.. கவனம்!
டெல்லியில் வழிபாட்டு தலங்கள் திறப்பு
அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். டெல்லியில் இன்று காலையிலேயே பல்வேறு கோவில்களும் திறக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். உத்தரப்பிரதேசத்தின் லக்னோவில் மசூதிகளில் இன்று காலையில் சமூக இடைவெளியுடன் தொழுகைகள் நடத்தப்பட்டன. முன்னதாக அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவிலிலும் இன்றும் நாளையும் முதல் கட்டமாக உள்ளூர் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
திருப்பதி நிலவரம்
பக்தர்கள் அனைவரும் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். திருப்பதியில் வரும் 11-ந் தேதிக்குப் பின்னர் பிற மாநிலங்களின் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். திருப்பதியில் வழக்கம் போல முடி காணிக்கை செலுத்தவும், திருமணங்கள் நடத்தவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் சபரிமலையில் வரும் 14-ந் தேதிதான் நடை திறக்கப்பட உள்ளது.
சபரிமலையில் அனுமதி
ஆன்லைன் மூலமே தரிசன அனுமதியை பக்தர்கள் பெற முடியும். சபரிமலையில் 1 மணிநேரத்துக்கு 200 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். குருவாயூரில் நாளை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். தமிழகத்தில் இன்று கோவில்கள் திறக்கப்படவில்லை. மகாராஷ்டிரா, கோவாவில் பெரும்பாலான கோவில்கள் திறக்கப்படவில்லை. டெல்லியில் ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள் முழுமையாக் திறக்கப்பட்டுள்ளன.
ஹோட்டல்கள், மால்கள்
ஹோட்டல்களில் இன்று முதல் வாடிக்கையாளர்கள் அனைவரும் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்பட்டிருக்கிறது. ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை ஏற்கனவே உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்றது. தமிழக அரசும் இது தொடர்பான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.