லோக்சபாவில் நரிக்குறவர், குருவிக்காரர் ஜாதிகளை எஸ்டி பட்டியலில் சேர்க்கும் மசோதா நிறைவேற்றம்
டெல்லி: நாடாளுமன்ற லோக்சபாவில் நரிக்குறவர், குருவிக்காரர் ஜாதிகளை பழங்குடியினர் (எஸ்டி) பட்டியலில் சேர்க்கும் மசோதா ஒருமனதாக நிறைவேறியது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று அனுப்பினார். அதில் நரிக்குறவர், பழங்குடி சமூகத்தினரை எஸ்டி பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி இருந்தார்.
பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தில், குருவிக்காரர் குழுவினருடன் இணைந்த நரிக்குறவர்" சமூகத்தினரை, தமிழகத்தின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் திட்டத்திற்கு இந்திய தலைமைப் பதிவாளர் ஒப்புக் கொண்டுள்ளதாக, மத்தியப் பழங்குடியினர் விவகாரங்கள் துறையின் இயக்குநர் மத்திய அரசின் கடிதத்தின் மூலம் (எண் 12016/S/2011-C&LM-1, நாள் 30-4-2013) தெரிவித்திருந்ததை, பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். வல்லுநர் குழுக்களான லோகூர் குழு 1965-ம் ஆண்டிலும், நாடாளுமன்றக் கூட்டுக் குழு 1967-ம் ஆண்டிலும், இந்த சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரைத்தன என்றும், நரிக்குறவர்கள் மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சமூகங்களில் ஒன்று; பழங்குடியினர் பட்டியலில் அவர்களைச் சேர்ப்பதன் மூலம், அவர்கள் அனைத்து அரசமைப்பு ரீதியிலான பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களைப் பெறத் தகுதியுடையவர்களாவார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மாதம் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், நரிக்குறவன், குருவிக்காரன் சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற லோக்சபாவில் இதற்கான மசோதா நேற்று ஒருமனதாக நிறைவேறியது. இதே மசோதா, ராஜ்யசபாவிலும் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் இம்மசோதா நிறைவேறிய பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு சட்டமாக நடைமுறைக்கு வரும்.
சமூக அநீதி...உச்சநீதிமன்ற நீதிபதிகளாக எஸ்சி, எஸ்டி, ஓபிசியினரை நியமிக்க மாட்டீங்களா? வீரமணி விளாசல்
குருவிக்காரர், நரிக்குறவர் சமூகத்தினர் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவதால்
- மத்திய அரசின் நலத் திட்டங்கள்
- மெட்ரிக் படிப்புக்கு பிந்தைய கல்வி உதவித்தொகை
- வெளிநாடுகளில் படிக்க தேசிய கல்வி உதவித்தொகை
- சலுகை கடன்கள்
- கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு பெற முடியும்.
முன்னதாக இந்த மசோதா மீது பேசிய திமுக எம்.பி. டாக்டர் செந்தில்குமார், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் லம்பாடி பெயர்களில் உள்ளவர்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதேநேரத்தில் குருவிக்காரன், நரிக்குறவன் என ஒருமையில் அழைக்காமல் குருவிக்காரர், நரிக்குறவர் என மரியாதையாக அழைக்கும் வகையில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என விசிக எம்.பி. ரவிக்குமார் லோக்சபாவில் நோட்டீஸ் கொடுத்திருந்தார். இந்த கோரிக்கையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.
இந்த மசோதா நிறைவேற்றம் தொடர்பாக விசிக எம்.பி. ரவிக்குமார் தமது சமூக வலைதளப் பக்கத்தில், 2006 இல் நான் எம்.எல்.ஏ ஆக இருந்தபோது விசிக சார்பில் முன்வைத்த கோரிக்கை, இப்போது நிறைவேறியது! அன்றே மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியதோடு எனது கோரிக்கையின் அடிப்படையில் நரிக்குறவர் நலவாரியத்தையும், வடலூரில் சிறப்புப் பள்ளியையும் உருவாக்கிய கருணாநிதிக்கும், அவர் வழியில் நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்றுப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்த பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்த கோரிக்கையை எழுப்ப வழிகாட்டிய தொ.திருமாவளவனுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.