சோனியாவிற்கு பதில் பிரியங்கா.. ரேபரேலி தொகுதியில் போட்டி? பாஜகவிற்கு புது சவால்
Recommended Video
டெல்லி: வரும் லோக்சபா தேர்தலில் தனது தாய் சோனியா காந்தியின், ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோனியா காந்தி கடந்த 1999ம் ஆண்டு முதல் எம்பியாக பதவி வகித்து வருவது ரேபரேலி தொகுதியாகும். உ.பி. மாநிலத்தில் கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக அலை வீசியபோது கூட ரேபரேலியில் சோனியாவும், அம்மாநிலத்தின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும் மட்டும் வென்றனர்.
பிற தொகுதிகளில் காங்கிரஸ் படு மோசமாக தோற்றபோதும், ரேபரேலி தொகுதியில், சோனியா காந்தி அமோக வெற்றி பெற்றார்.
முக்கியமான தொகுதி
ரேபரேலி தொகுதிக்கும், நேரு குடும்பத்திற்குமான உறவு நெடியது. 1967 முதல் 1971 வரை முன்னாள் பிரதமரான இந்திரா காந்தி இந்த தொகுதியில் வெற்றி பெற்றார். பிறகு இங்கு சோனியா காந்தியின் செல்வாக்கு இங்கே கூடியது. எனவே, இந்த தொகுதியில், பிரியங்கா காந்தியை களமிறக்கி, அவரது அரசியலுக்கு அஸ்திவாரம் போட முடிவு செய்துள்ளார் சோனியா காந்தி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒதுங்கும் சோனியா
சோனியா காந்திக்கு கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு அடிக்கடி மருத்துவ சிகிச்சை எடுத்து வருகிறார். எனவே, வரும் லோக்சபா தேர்தலில் சோனியா காந்தி போட்டியிடாமல் தவிர்க்க திட்டமிட்டுள்ளார். இதனால், நேரு குடும்ப பாரம்பரியத்துடன் ஒன்றிப்போன, ரேபரேலியில் பிரியங்காவை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெற்றி எளிது
உ.பி.யில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து, 76 தொகுதிகளில் போட்டியிட உள்ளன. ஆனால் ரேபரேலி மற்றும் அமேதியில் போட்டியாமல் காங்கிரசுக்கு உதவ முன் வந்துள்ளன. அதேநேரம் 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளது காங்கிரஸ். ஆனால் ரேபரேலி, அமேதியில் வெற்றி ஏறத்தாழ உறுதி என்று நினைக்கிறது காங்கிரஸ். எனவே அதில் பிரியங்கா காந்தியை களமிறக்கி வெற்றியோடு அவரை அரசியலுக்குள் கொண்டுவர சோனியா காந்தி திட்டமிட்டுள்ளார்.
நிர்வாக திறமை
இந்த நிலையில்தான், உத்தரபிரதேச கிழக்கு பிரிவுக்கு பிரியங்கா காந்தியை பொதுச்செயலாளராக நியமித்துள்ளார் ராகுல் காந்தி. தீவிர அரசியலில் இருந்து சோனியா ஓய்வு பெற்றுள்ள நிலையில், அந்த இடத்தை நிரப்ப தனது சகோதரியை தேர்ந்தெடுத்துள்ளார் ராகுல் காந்தி. பிரியங்கா காந்தியை பொறுத்தளவில், மிகவும் தைரரியமானவராகவும், முடிவுகள் எடுப்பதில் திறமை மிக்கவராகவும் அறியப்படுபவர். காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில், அவர் மற்றொரு இந்திரா காந்தியாக பார்க்கப்படுபவர். எனவே பாஜகவிற்கு கடும் நெருக்கடிகளை கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, இனிதான் ஆட்டம் களை கட்டப்போகிறது.