2024 தேர்தலில்.. ராகுல் காந்தியால்.. காங்.குக்கு வெற்றி தேடித் தர முடியாது.. அதிருப்தி தலைவர்!
2014ஆம் ஆண்டு மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை.
டெல்லி: ராகுல்காந்திக்கு நேரம்தான் சரியில்லை போல கட்சியில் எழுந்த கலகக்குரல் இன்னமும் அடங்கிய பாடாக இல்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி கட்சியை வழிநடத்தவும், 2024 லோக்சபா தேர்தலில் 400 இடங்களைப் பெறவும் எங்களுக்கு உதவ முடியும் என்று நாங்கள் கூறும் நிலையில் இல்லை என்று கூறியுள்ளார் சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்களில் ஒருவர் கூறியுள்ளார்.
2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த இரண்டு லோக்சபா தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி படு தோல்வியை சந்தித்தது என்பதை நாம் உணர வேண்டும் என்று கூறியுள்ளார் அந்த தலைவர்.
காங்கிரஸ் கட்சியின் தலைவராக யார் வரவேண்டும் என்று சொல்வதை விட யார் வரக்கூடாது என்று கூறி வருகின்றனர் சில தலைவர்கள். சோனியா காந்தியே தலைவராக இருக்க வேண்டும் என்று கட்சியில் ஒரு பிரிவினர் கூறி வரும் நிலையில், ராகுல் காந்தியை மீண்டும் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று கட்சியில் உள்ள இளம் தலைவர்கள் பலர் சமீப காலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
எச்.வசந்தகுமார் உடலுக்கு தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி - நாளை சொந்த ஊரில் இறுதிச்சடங்கு
காங்கிரஸ் கட்சியின் தலைமை
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக தற்போது சோனியா காந்தி இருந்து வருகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற லோக்சபா காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்ததை தொடர்ந்து, ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து சோனியா காந்தி இடைக்கால தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அவர் இடைக்கால தலைவர் பொறுப்பை ஏற்று கடந்த 10ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைந்தது.
கடிதம் எழுதிய தலைவர்கள்
இந்த நிலையில் ராகுல்காந்தியே மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த நேரத்தில்தான் கட்சியின் தலைவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்று சோனியாகாந்திக்கு கடிதம் எழுதினர் மூத்த தலைவர்கள். 23 பேர் எழுதிய அந்த கடிதத்தில், காங்கிரஸ் கட்சிக்கு சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய, கட்சி அலுவலகங்களுக்கு வரக்கூடிய முழுநேர தலைமை தேவை என்றும், கட்சியின் முக்கிய அமைப்புகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
கட்சிக்கு முழுநேர தலைவர் தேவை
கட்சியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்கள், நியாயமான உட்கட்சி தேர்தல்கள், பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து குழுவாக முடிவெடுப்பது மற்றும் முழுநேரம் கட்சிப்பணியாற்றும் தலைமை ஆகியவைதான் கட்சியின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
காரியக்கமிட்டி கூட்டத்தில் சலசலப்பு
இந்த கடிதம் காங்கிரஸ் கட்சியின் காரியக்கமிட்டி கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சோனியாகாந்தியே மீண்டும் இடைக்கால தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்தநிலையில் சோனியாகாந்திக்கு கடிதம் எழுதிய தலைவர்களின் ஒருவர் தற்போது அளித்துள்ள பேட்டி மீண்டும் சலசலப்பை உருவாக்கியுள்ளது.
ராகுல்காந்தி வழி நடத்த முடியாது
ராகுல் காந்தி கட்சியை வழிநடத்தவும், 2024 இல் 400 இடங்களைப் பெறவும் எங்களுக்கு உதவ முடியும் என்று நாங்கள் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார். 2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களில், கட்சியால் வெற்றி பெற முடியவில்லை என்பதை நாம் உணர வேண்டும்.
கட்சியில் பிரச்சினை
நாட்டின் வடக்குப் பகுதியில் நாக்பூர் முதல் சிம்லா வரை கட்சிக்கு 16 எம்.பிக்கள் மட்டுமே உள்ளனர், அதில் எட்டு இடங்கள் பஞ்சாபிலிருந்து வந்தவை. நாங்கள் இந்தியாவில் இருக்கிறோம் என்பதை உணர வேண்டும். மீண்டும் காரியக்கமிட்டி கூட்டம் நடக்கும் போது என்னுடைய கருத்துக்களை முன்வைப்பேன்.
கட்சி எதிர்கொண்டுள்ள பிரச்சினை
இதில் மற்றொரு உண்மையும் உள்ளது. பிரச்சினை என்பது தனிநபர்களுக்கு மட்டுமானது அல்ல. இது நாடு எதிர்கொண்டிருக்கும், கட்சி எதிர்கொண்டு வரும் விவகாரங்கள் பற்றியது. கடிதம் எழுதியவர்களில் பெரும்பாலானோர் நீண்ட காலமாக அரசியலில் இருப்பதால், அவர்கள் கட்சிக்கு விசுவாசமாக இருப்பதாகவும், சோனியா காந்தி மீது மிக உயர்ந்த மரியாதை இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
சோனியா தீர்வு காண்பார்
தற்போது உள்ள பிரச்சினைகளில் இருந்து கட்சி மீண்டு வரவும் பாஜகவை வெல்லவும் உதவும் என்று அவர்கள் கூறுகிறார்கள். தலைவர் சோனியா காந்தி, நியாயமான எண்ணம் கொண்டவர், தங்களின் வார்த்தைகளுக்கு செவி சாய்ப்பார், நிச்சயமாக அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இப்போதே கிளம்பும் எதிர்ப்பு
2014, 2019ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் கட்சி படுதோல்வியை சந்தித்தது. 2024 ஆம் நடைபெறும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பிரதமர் வேட்பாளராகவும் ராகுல்காந்தி முன்னிறுத்தப்படலாம் என்று அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் கட்சியின் மூத்த தலைவர்கள் ராகுல்காந்திக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.