ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் மீதான அதிகாரத்தை பறிக்கும் மத்திய அரசு- 6 மாநிலங்கள் கடும் எதிர்ப்பு!
டெல்லி: ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாநில அரசுகளின் ஒப்புதல் இல்லாமலேயே மத்திய அரசுப் பணிக்கு மாற்றுவதற்கான முயற்சிகளுக்கு மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு மாற்றும் விவகாரங்களில் மாநில அரசுகளின் ஒப்புதல் பெற வேண்டும். அதாவது இந்த விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு வீட்டோ எனப்படும் முடிவெடுக்கும் அதிகாரம் உண்டு.
4-வது நாள்... கோவையில், குடோனுக்குள் வனத் துறையினருக்கு தண்ணி காட்டும் சிறுத்தை.. முடியல!
இந்த நிலைமையை மாற்றும் வகையில் மாநில அரசுகளின் அந்த அதிகாரத்தை பறிக்கும் வகையில் மத்திய அரசு சட்ட திருத்த மசோதா கொண்டு வர உள்ளது. வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளை மாநில அரசு ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு பணிக்கு எடுத்துக் கொள்ள முடியும் என்கிற நிலைமை உருவாகும்.
மத்திய அரசு கடிதம்
இது குறித்து மாநில அரசுகளுக்கு கடந்த டிசம்பர் மாதம் 2 முறை மத்திய அரசு கடிதங்களை அனுப்பியது. மீண்டும் மத்திய அரசு ஜனவரி 12-ந் தேதி ஒரு கடிதம் அனுப்பி வைத்தது. வரும் 25-ந் தேதிக்குள் மாநிலங்கள் கருத்து தெரிவிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.
மமதா எதிர்ப்பு
மேலும் மத்திய அரசுப் பணிக்கு செல்ல விரும்பும் அதிகாரிகளின் பட்டியலையும் மத்திய அரசு கேட்டிருக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பினார். அதில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்றும் அந்த கடிதத்தில் மமதா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
6 மாநிலங்கள் எதிர்ப்பு
இதேபோல் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநிலங்கள் மத்திய அரசின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. குறிப்பாக பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் ஒருங்கிணைந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கேரளா சட்ட அமைச்சர் ராஜீவி இது குறித்து கூறுகையில், மத்திய அரசின் இத்தகைய முயற்சியை நிச்சயம் நாங்கள் எதிர்ப்போம் என்றார். காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்க்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதாலா கூறியுள்ளார்.
எத்தனை அதிகாரிகள்?
தற்போது பீகாரில் மொத்தம் 248 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 32 பேர் மத்திய அரசு பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒடிஷாவில் மொத்தம் உள்ள 180 அதிகாரிகள் 25 பேர் மத்திய அரசுப் பணிகளில் இருக்கின்றனர். உ.பி.யில் மொத்தம் 536 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 32 பேரும், தமிழகத்தில் மொத்தம் 322 அதிகாரிகளில் 20 பேரும் கேரளாவில் 125 அதிகாரிகளில் 20 பேரும் மத்திய அரசு பணிகளில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.