வேகமெடுத்த கொரோனா! இந்தியா வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு சோதனை! மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்!
டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் நேற்று ஒருநாள் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 14,506 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 18,819 ஆக அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,34,52,164ஆக உயர்ந்துள்ளது.
அதில் அதிகபட்சமாக கேரளாவில் புதிதாக 4,459 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. மகாராஷ்டிராவில் 3,957 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கர்நாடகாவில் 1,945 பேரும், தமிழ்நாட்டில் 1,827 பேரும், மேற்கு வங்கத்தில் 1,424 பேரும், டெல்லியில் 1,109 பேருக்கும் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனால் நாடு முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 99,602ல் இருந்து 1,04,555க உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 39 பேர் உயிரிழந்தனர். இதனால் கொரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை 5,25,116 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவர்களில் 13,827 போ் குணமடைந்துள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,28,22,493க அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 197.61 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. புதன்கிழமை மட்டும் 14,17,217 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்த நிலையில், தற்போது சில வாரமாக தொடர்ந்து அதிகரித்து வருவதால், பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை பரிசோதனை செய்ய வேண்டும் என்று அனைத்து மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
Recommended Video
அதில், வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளில் ஒவ்வொரு விமானத்திற்கும் 2 சதவிகிதம் பேரை தேர்வு செய்து ஆர்டிபிசிஆர் சோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தால், அவர்களின் ரத்த மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட வேண்டும். அதேபோல் குறிப்பிட்ட பகுதிகளில் திடீரென கொரோனா பரவல் அதிகரித்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.