அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டமா? எனக்கு அழைப்பு வரலையே - பதறி போன் போட்ட திண்டுக்கல் சீனிவாசன்
சென்னையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் 6ஆம் தேதி நடைபெறும் என வெளியான தகவல் பொய்யானது என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்: எம்எல்ஏவான தனக்கு இதுவரை ஆறாம் தேதி கூட்டம் நடப்பது தொடர்பான தகவல் கட்சித் தலைமை அலுவலகத்திலிருந்து இதுவரை வரவில்லை என்று கூறியுள்ளார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என்று வெளியான தகவலில் உண்மையில்லை என்றும் கூறியுள்ளார்.
அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற பஞ்சாயத்து கடந்த சில மாதங்களாக நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருக்கிறது. இந்த நெருப்பை பற்ற வைத்து புகைய விட்டவர் அமைச்சர் செல்லூர் ராஜூ. அவர் கொளுத்திப்போட்ட வெடி சரவெடியாக வரிசையாக வெடித்தது.
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார் என அமைச்சர்கள் ஆளுக்கு ஒரு கருத்தை கூறினர் இதனால் அதிமுகவில் குழப்பம் கும்மியடித்தது. அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என்று தேனி பக்கம் போஸ்டர் அடிக்க பஞ்சாயத்து பெரிய அளவில் வெடித்தது. ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட சில நாட்கள் அமைச்சர்கள் அமைதி காத்தனர்.
செயற்குழு கூட்டத்தில் முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்து பூதாகரமானது ஆனாலும் முடிவு எட்டப்படாமலேயே முடிந்து போனது. முதல்வர் வேட்பாளர் யார் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமியும் அக்டோபர் 7 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என்று அதிமுகவின் மூத்த தலைவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த சூழ்நிலையில்தான் வரும் 6ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சென்னைக்கு வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இதனால் பரபரப்பு அதிகமானது. அடுத்த சில மணிநேரங்களில் அந்த அறிவிப்பு அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இந்த நிலையில் திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன், ஆறாம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டிருந்தது. ஆனால் எம்எல்ஏவான தனக்கு இதுவரை ஆறாம் தேதி கூட்டம் நடப்பது தொடர்பான தகவல் கட்சித் தலைமை அலுவலகத்திலிருந்து இதுவரை வரவில்லை என்று தெரிவித்தார்.
உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு போன் செய்து பேசுகிறேன் எனக்கூறிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அனைவரின் முன்னிலையிலும் கட்சித் தலைமை அலுவலகத்திற்கு போன் செய்து விசாரித்தார்.
தர்ம யுத்தம் 2.0 நடக்க வாய்ப்பே இல்லை.. டெல்லி மேலிடம் தந்த ஆதரவு.. மாறிய அதிமுக நிலவரம்
அதற்கு எதிர் பக்கம் இருந்து பதில் கூறியவர்கள், ஆறாம் தேதி எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுவதாக கட்சி தலைமையிலிருந்து சமூக வலைதளங்களில் பதிவு செய்யவில்லை. அது தவறான தகவல் என தெரிவித்தனர். உங்களது முன்னிலையில்தான் கட்சித் தலைமைக்கு போன் செய்து பேசினேன் எனவே அது பொய்யான தகவல் என விளக்கம் அளித்தார் திண்டுக்கல் சீனிவாசன்.