கிர் காடுகளில் அழியும் சிங்கராஜாக்கள்… 5 ஆண்டுகளில் 250 சிங்கங்கள் பலி!
அகமதாபாத்: குஜராத்திலுள்ள கிர் தேசிய பூங்காவில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 250 சிங்கங்கள் உயிரிழந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.
சிங்கங்களின் பால் அதிக ஆர்வம் கொண்ட ஜூனாகத் நவாப், குஜராத் மாநிலத்தில் கிர் காட்டை உருவாக்கினார். அப்போது அக்காட்டில் வெறும் 13 சிங்கங்கள் இருந்தன.
கடந்த 2010 மே மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி அப்பகுதியில் உள்ள 10000 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் சுமார் 411 சிங்கங்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டிருந்தது.
குறைந்து வரும் சிங்கங்கள்
கிர் தேசிய பூங்காவில் ஆசிய சிங்கங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. ஆனால் தற்போது எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி அவற்றின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து வருவது தெரியவந்துள்ளது.
சிங்கங்களுக்கு பாதிப்பு
தற்போது, புலி, சிறுத்தை, கழுதைப்புலி, போன்றவையும் சேர்ந்து வாழ்வதால், அதிக உணவுப் பஞ்சம் ஏற்படுகிறது. இதன் பொருட்டு சிங்கங்கள் ஊருக்குள் நுழைந்து கால்நடைகளை தாக்குகின்றன. தவிர காடுகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருவதும், சிங்கங்களை பாதிக்கின்றன.
உயிரிழக்கும் சிங்கங்கள்
ஆக்கிரமிப்பாளர்கள் சட்ட விரோதமாக அமைத்த மின்சார வேலிகள், தாங்கள் பயிரிட்ட பயிர்களை மான்கள் அழிக்காமல் பாதுகாக்க என கூறப்பட்டாலும், அதில் மான்களைவிட சிங்கங்களே அதிகம் சிக்கி இறந்து போகின்றன.
இது தவிர சுற்றுச் சுவர் இல்லாமல் தோண்டப்பட்ட கிணறுகளில் தவறி விழுந்தும் இறந்து போகின்றன. சிங்கங்கள் இறந்துபோகின்றன.
20000 கிலோமீட்டர் பரப்பளவில்
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி சிங்கங்கள் 20000 சதுரகிலோமீட்டர் அளவில் பரவி இருப்பதும் அவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து உள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும் சிங்கங்கள் தங்கள் பரப்பை அதிகரித்தது தொடர்பாக மேலும் நடத்தப்பட்ட களப்பணியில் பல அதிர்ச்சியூட்டும் முடிவுகள் தெரியவந்துள்ளன.
250 சிங்கங்கள் மரணம்
அதில் சுமார் 250 சிங்கங்கள் இந்த ஐந்தாண்டுகளில் இறந்திருப்பது தெரியவந்துள்ளது. 2012-13ல் சுமார் 48 சிங்கங்களும் 2013-14ல் சுமார் 53 சிங்கங்களும் இறந்திருப்பது தெரியவந்துள்ளது.
அமைச்சர் தகவல்
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் கன்பத் வாஸவா, 2012-ம் ஆண்டில் 24 சிங்கங்களும் 10 சிங்க குட்டிகளும் பலியாகி உள்ளது. அதே போல் 2013-ம் ஆண்டில் 22 சிங்கங்களும், 27 சிங்க குட்டிகளும் பலியாகி உள்ளது. மோசமான சுற்றுச்சூழல் காரணமாக இத்தகைய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
20 சிங்கங்கள் உயிரிழப்பு
மேலும் இவ்வருடத்தொடக்கத்தின் முதல் மூன்று மாதத்திற்குள் சுமார் 20 சிங்கங்கள் இதுவரை இறந்துள்ளன. இவற்றில் எட்டு சிங்கங்கள் விபத்தில் பலியாகி உள்ளன. அவற்றில் ஆறு ரயில் மோதி பலியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தொற்றுநோய் பாதிப்பு
தட்ப வெப்ப மாறுதல், சுற்றுச் சூழல் சீரழிவு போன்றவை எண்ணிக்கையை வெகுவாக குறைக்கின்றன. வறட்சி காலத்தில், சிங்கங்கள் அதிக தொற்று நோய்களுக்கு ஆளாகும்.
மரணத்தை தடுக்க முடியுமா?
சிங்கங்களின் இறப்பை தடுக்கும் நோக்கில் அரசு திட்டங்களை இயற்றி விரைவில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.