முடி கொட்டுறது ஒரு தீர்க்க முடியாத பிரச்சனையா? இப்படி அவசரபட்டுட்டியேம்மா...??!!
கர்நாடகாவில் தலைமுடி கொட்டியதால் விரக்தியில் கல்லூரி மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
பெங்களூரு: கர்நாடகாவில் தலைமுடி கொட்டியதால் விரக்தியில் கல்லூரி மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடகு மாவட்டம் பொன்னம்பேட்டை அருகே உள்ள நிட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபா. இவருடைய மனைவி சைலா. இந்த தம்பதியின் மகள் நேகா கங்கம்மா.
19 வயதான இவர் மைசூருவில் உள்ள தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வந்தார். இவர் மைசூருவில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி படித்து வந்தார்.
மாயமான மாணவி
இந்த நிலையில் கடந்த மாதம் 28-ந்தேதி, தங்கும் விடுதியில் இருந்து திடீரென்று மாயமானார். இதுதொடர்பாக தங்கும் விடுதி உரிமையாளர்கள் மைசூரு போலீசில் புகார் கொடுத்திருந்தனர். அதன்பேரில் போலீசார் நேகாவை தீவிரமாக தேடி வந்தனர்.
நதியில் பெண் உடல்
இந்த நிலையில், நேற்று காலை நிட்டூர் பகுதியில் ஓடும் லட்சுமண தீர்த்த நதியில் ஒரு பெண் உடல் மிதப்பதாக பொன்னம்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மடிகேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நதியில் குதித்து தற்கொலை
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் அதேப்பகுதியை சேர்ந்த நேகா என்பது தெரியவந்தது. மேலும் அவர், லட்சுமண தீர்த்த நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.
அழகு நிலையம் சென்ற மாணவி
மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் நேகா மைசூருவில் உள்ள அழகு நிலையத்தில் தனது தலைமுடியை அழகாக வெட்டுவதற்காக சென்றார்.
முடி கொட்டியதால்
அப்போது அந்த அழகு நிலையத்தில் நேகாவின் தலைமுடிக்கு பயன்படுத்திய கெமிக்கலால், அவருக்கு தொடர்ந்து தலைமுடி கொட்டியுள்ளது. நாளாக, நாளாக அவருக்கு தலைமுடி அதிகமாக கொட்டியதால், நேகா கல்லூரிக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
முடிகொட்டியதால் தற்கொலை
அவருடைய குடும்பத்தினர் ஆயுர்வேத சிகிச்சை மூலம் சரிபடுத்தி விடலாம் என்று அவரிடம் சமாதானம் கூறி கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் தலைமுடி கொட்டுவது நிற்காததால், அவர் கடந்த 28-ந்தேதி, யாரிடமும் கூறாமல் நிட்டூருக்கு வந்து, அங்கு லட்சுமண தீர்த்த நதியில் குதித்து தற்கொலை செய்துகொண்டார் என தெரியவந்துள்ளது.
பெரும் சோகம்
இதனிடையே நேகாவின் பெற்றோர் பொன்னம்பேட்டை போலீசில், மைசூரு அழகு நிலையம் மீது புகார் கொடுத்துள்ளனர். தலைமுடி கொட்டியதால் கல்லூரி மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.