சுதந்திரத்துக்கு பின் பிறந்த முதல் துணை ஜனாதிபதி.. வெங்கையா நாயுடு அரசியல் வாழ்வில் மற்றொரு பெருமை
துணை ஜனாதிபதி தேர்தலில் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றுள்ளதால் சுதந்திரத்துக்கு பிறகு பிறந்த முதல் துணை ஜனாதிபதி என்ற பெருமை கிடைத்துள்ளது.
டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தல் வெங்கையா நாயுடு வெற்றி பெற்ற நிலையில் சுதந்திர இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியானார்.
துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரியின் பதவிக்காலம் இந்த மாதம் முடிவடைய உள்ளநிலையில் அப்பதவிக்கு இன்று தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக சார்பில் வெங்கையா நாயுடுவும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் சார்பில் மகாத்மா காந்தியின் பேரன் கோபால கிருஷ்ண காந்தியும் போட்டியிட்டனர்.
இதில் இன்று மாலை வெளியான தேர்தல் முடிவுகளில் வெங்கையா நாயுடு அமோக வெற்றி பெற்றுள்ளார்.
எந்த ஊரை சேர்ந்தவர்
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கையா, கடந்த 1949-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி பிறந்தார். ஆந்திரா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். ஜெய் ஆந்திரா இயக்கம் என்றதன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
இளைஞரணி தலைவர்
பாஜகவின் இளைஞரணி தலைவராக கடந்த 1977-இல் இருந்தார். இவர் முதல் முறையாக 1978-இல் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985-88 வரை ஆந்திர மாநில பாஜக பொதுச் செயலாளராகவும், 1988-1993 வரை ஆந்திர மாநில பாஜக தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
எம்.பி.யானார்
கடந்த 1988-ஆம் ஆண்டிலிருந்து 3 முறை கர்நாடகா மாநில எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் மத்தியில் பாஜக ஆட்சியின்போது கடந்த 2000-2002-ஆம் ஆண்டு வரை மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார்.
தேசிய துணை தலைவர்
கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் பாஜகவின் தேசிய துணைத் தலைவராக உள்ளார். கடந்த 2014-2017 வரை மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராகவும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராகவும், நகர்ப்புற வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.பின்னர் 2016-17-ஆம் ஆண்டு வரை தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராகவும் இருந்தார்.
வெற்றியின் சிறப்பு
கோபால கிருஷ்ண காந்தி வெற்றி பெற்றிருந்தால் 13-ஆவது துணை ஜனாதிபதி என்ற பெருமையை பெற்றிருப்பார். ஆனால் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றதால் சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் துணை குடியரசுத் தலைவர் என்ற பெருமையை தட்டிச் சென்றுள்ளார். கோபால கிருஷ்ண காந்தி கடந்த 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி பிறந்தார். தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரி 1937-ஆம் ஆண்டு பிறந்தவர்.
12 பேரும் சுதந்திரத்துக்கு முன்
இந்தியாவில் துணை ஜனாதிபதிகளாக பதவி வகித்த 12 பேரும் சுதந்திரத்துக்கு முன்பு பிறந்தவர்களே. இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கடந்த 1888-ஆம் ஆண்டு பிறந்தவர். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர் என்ற பெருமை நரேந்திர மோடிக்கு உள்ளது. அதேபோல வெங்கையா நாயுடுவும் இந்தப் பெருமையைப் பெற்றுள்ளார்.