செல்பி வித் நோயாளிகள்... எய்ம்ஸ் மருத்துமனை வேண்டி உ.பி. மக்கள் புதுமையான போராட்டம்
டெல்லி: தங்கள் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி போராடி வரும், உத்திரப்பிரதேசத்தின் பந்தல்கண்ட் பகுதி மக்கள், நோயாளிகளுடன் செல்பி எடுத்து அதனை பிரதமருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர்.
உத்திரப் பிரதேச மாநிலம் பந்தல்கண்ட் பகுதியில் உயர்தர மருத்துவமனை இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, தங்கள் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என அப்பகுதி மக்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பலமுறை அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதமும் அனுப்பியுள்ளனர்.
எனினும், அந்த கடிதங்களின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அப்பகுதி மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர். எனவே, பிரதமரின் வழியிலேயே அவரது கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப அவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
இதற்காக அவர்கள் கையில் எடுத்துள்ள ஆயுதம் செல்பி. ஹரியானா மாநிலத்தில் பெண் சிசுக்கொலைகள் அதிகமாக நடைபெறுவது குறித்து வருத்தம் தெரிவித்த மோடி, ‘தங்கள் பெண் குழந்தைகளுடன் செல்பி எடுத்து தனக்கு அனுப்பி வைக்குமாரு' சமீபத்தில் அறிவித்தார். அதன்படி மக்களும் செல்பிக்களை அனுப்பி வருகின்றனர்.
அந்தவகையில், தற்போது உயர் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுடன் செல்பி எடுத்து அனுப்பும் போராட்டத்தை நடத்த பந்தல்கண்ட் மக்கள் முடிவு செய்துள்ளனர்.
இவ்வாறு நோயாளிகளுடன் எடுத்துக் கொள்ளும் செல்பிக்களை பிரதமர் மோடியின் பேஸ்புக், வாட்ஸ் அப், டிவிட்டர் போன்ற சமூக வலைதளப் பக்கங்களுக்கு அனுப்பி வைக்குமாறு பொதுமக்களுக்கு போராட்டக்காரர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.