எங்களுக்காக உழைக்காவிட்டால் ஓடிப் போ... வாக்காளர்களின் புதிய கோஷம்
டெல்லி: நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் வழக்கமான பல விஷயங்களை மக்கள் புறக்கணித்துள்ளனர் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டியுள்ளன.
குறி்ப்பாக இலவசத் திட்டங்களை மக்கள் நிராகரித்துள்ளனர். ஒரே அரசியல்வாதிக்கு ஓட்டுப் போடும் பழக்கத்தை விட்டுள்ளனர். யார் வேட்பாளர், நல்லவரா, கெட்டவரா என்று பார்த்துள்ளனர்.
இலவசத் திட்டங்களுக்கு ஆரம்பத்தில் பெரும் வரவேற்பு இருந்தது. குறிப்பாக தமிழகத்தில் நடந்த தேர்தல்களில் இந்த இலவச அறிவிப்புகளுக்கு மக்கள் மதி மயங்கி வரவேற்பு கொடுத்தனர். இதனால் நாடு முழுவதும் இது பரவிப் பிரபலமானது. ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் இந்த இலவசங்களை அறிவித்த கட்சிகளை மக்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
டிவி லேப்டாப் பிரிட்ஜ் சைக்கிள்
இலவச டிவி, லேப்டாப், பிரிட்ஜ், சைக்கிள் என வாய்க்கு வந்ததையெல்லாம் இலவசமாக அறிவிக்கின்றன கட்சிகள். ஆனால் இது இப்போது பழங்கதையாகி விட்டது.
மாறி மாறி அள்ளித் தந்த திமுக- அதிமுக
தமிழகத்தில்தான் இந்த இலவசங்கள் முதல் முறையாக தோன்றி பிரபலமாகின. குறிப்பாக திமுக அறிவித்த இலவச டிவியும் இதர இலவசத் திட்டங்களும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இதைப் பார்த்துத்தான் பின்னர் அதிமுகவும் இலவச லேப்டாப், ஆடு, மாடு உள்ளிட்டவற்றை அறிவித்தது. அதற்கும் மக்கள் வரவேற்பளித்தனர்.
காங். திட்டங்களை சுட்ட காங். அல்லாத அரசுகள்
மேலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அறிவித்த பல திட்டங்களை, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை விட காங்கிரஸ் அல்லாத அரசுகள் உள்ள மாநிலங்களில்தான் திறம்பட அமல்படுத்தி அவர்கள் பெயர் வாங்கிக் கொண்டு போய் விட்டனர்.
உதாரணத்திற்கு இவர்கள்
இதற்கு சரியான உதாரணம் ஒரிசாவின் பிஜூ பட்நாயக் கட்சி, சிக்கிமின் பவன் குமார் சாம்லிங் கட்சி, பீகாரின் நிதீஷ் குமார், பஞ்சாபின் பிரகாஷ் சிங் பாதல், திரிபுராவின் மாணிக் சர்க்கார், மத்தியப் பிரதேசம், சட்டிஸ்கர், குஜராத் மாநில பாஜக அரசுகளைச் சொல்லலாம்.
ஊழல்களில் உழலும் காங்கிரஸ்
காங்கிரஸைப் பொறுத்தவரை அதற்கு அதன் மீதான ஊழல் புகார்களை சமாளிக்கவே நேரம் போதவில்லை. மகாராஷ்டிராவில் சரமாரியாக கிளம்பிய ஊழல் பிரச்சினைகள், ஆந்திராவை அல்லாட வைத்து வரும் மாநிலப் பிரிவினை ஆகியவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.
டெல்லியில் வீசப்பட்ட வெங்காய வெடி - கன்னி வெடி
டெல்லியிலோ பிரச்சினையின் விஸ்வரூபமாக காங்கிரஸ் மாறிப் போய் மண்ணைக் கவ்வியதை மக்கள் பார்த்தனர்.
விலைவாசி உயர்வு, பணவீக்கம்தான் மக்களுக்கு கவலை
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் இலவச அறிவி்ப்புகளை விட விலைவாசியைக் குறைக்கும் திறமை யாருக்கு உள்ளது, பண வீக்கத்தை யார் வந்தால் குறைக்க முடியும், ஊழலற்ற அரசை யாரால் கொடுக்க முடியும் என்றுதான் மக்கள் பெரிதாக பார்த்துள்ளது தெரிய வரும்.
காங். வீழ விலைவாசிதான் முக்கியக் காரணம்
இலவச அறிவிப்புகளைக் கண்டு மயங்காத மக்கள், விலைவாசி உயரக் காரணம் காங்கிரஸ்தான் என் கடும் கோபமாகித்தான் ராஜஸ்தானிலும், டெல்லியிலும் காங்கிரஸ் அரசை கீழிறக்கி விட்டுள்ளனர். டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்ற எண்ணம் மக்களிடையே வந்து விட்டது. இதனால்தான் ஷீலா தீட்சித் மீதிருந்த அத்தனை நம்பிக்கையையும் மக்கள் கைவிட்டு விட்டனர்.
சொந்த செல்வாக்கும்
அதேபோல தனிப்பட்ட தலைவர்களின் சொந்த செல்வாக்கும் கூட கட்சிகளுக்குப் பலன் கொடுத்துள்ளது. மத்தியப் பிரதேசம் என்றால் அங்கு சிவராஜ் சிங் செளகானைத்தான் மக்கள் முதன்மையாகப் பார்த்துள்ளனர். அதேபோல சட்டிஸ்கரிலும் ரமண் சிங்கைத்தான் பார்த்துள்ளனர். ஆனால் ராஜஸ்தானில் அசோக் கெலாட்டின் நிர்வாகத் திறமை மக்களிடையே எடுபடாமல் போனது காங்கிரஸுக்குத் துரதிர்ஷ்டமானதுதான்.
பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் அவுட்
நடந்து முடிந்த தேர்தலில் பல சிட்டிங் எம்.எல்.ஏக்கள் தோல்வியைத் தழுவியுள்ளனர். வெறும் பெஞ்ச்சைத் தேய்த்த எம்.எல்.ஏக்கள் இவர்கள். இவர்களை மக்கள் விரட்டியடித்துள்ளனர். இதுவும் மக்களைப் பற்றிக் கவலைப்படாமல், பர்ஸை நிரப்பி பகாசுரர்களாக மாறத் துடிக்கும் அரசியல்வாதிகளுக்கு நல்ல பாடம்தான்.
மாற்றி யோசிக்கத் தொடங்கி விட்ட மக்கள்
மொத்தத்தில் இலவசத் திட்டங்கள், தேவையி்ல்லாத வெட்டிப் பேச்சுக்கள், செயல் திறனற்ற மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரை மக்கள் புறக்கணித்து விட்டனர். வரும் லோக்சபா தேர்தலுக்குள் திருந்தாத அரசியல்வாதிகளுக்கு இதை விட பெரிய பரிசை மக்கள் தருவார்கள் என்று தைரியமாக நம்பலாம்.... காரணம், அவர்கள் மாற்றி யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.
நல்லது நடந்தா நாட்டுக்கும், நமக்கும் நல்லதுதானே... வரவேற்போம்.