திருமண பதிவை கட்டாயமாக்க சட்டம்- மத்திய அமைச்சர் தகவல்
டெல்லி: திருமணத்தை பதிவு செய்வதை கட்டாயமாக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மக்களவையில் தெரிவித்தார்.
மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமான கேள்வி ஒன்றுக்கு ரவிசங்கர் பிரசாத் அளித்த பதிலில் "திருமணப்பதிவை கட்டாயமாக்கும் வகையிலான புதிய சட்டத்தை கொண்டுவர அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 'பிறப்பு மற்றும் இறப்பு பதிவு சட்டம்-2012' இதை கட்டாயப்படுத்தியபோதிலும், ராஜ்யசபாவில் நிறைவேறிய இந்த சட்டம் இன்னும் லோக்சபாவில் நிறைவேறவில்லை.
எனவே திருமண பதிவை கட்டாயப்படுத்தும் புதி சட்ட மசோதாவை லோக்சபாவில் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உத்தரபிரதேசம் மற்றும் தெலுங்கானா தவிர அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் திருமணப்பதிவை கட்டாயப்படுத்தும் சட்டம் அந்தந்த மாநில அரசுகளால் நிறைவேற்றப்பட்டுள்ளன. இவ்வாறு தனது பதிலில் தெரிவித்துள்ளார் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.