முடிந்தது பாஜக செயற்குழு.. கடைசி வரை அத்வானி பேசவில்லை.. கட்சி "மதிப்பை"க் கூட்ட தீர்மானம்!
பெங்களூரு: கடந்த 2 நாட்களாக பெங்களூருவில் நடைபெற்று வந்த தேசிய செயற்குழு கூட்டத்தில் கட்சியின் மதிப்பை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆலோசிக்கப்பட்டுள்ளன. அத்வானி உரையின்றியே கூட்டம் நிறைவு பெற்றது.
பெங்களூருவிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், வெள்ளிக்கிழமை தொடங்கியது பாஜக தேசிய செயற்குழு கூட்டம். பிரதமர் நரேந்திரமோடி, பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் அனைவரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
இதுதவிர செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கட்சி தலைவர் அமித்ஷா கூட்டத்தை தொடங்கி வைத்தார். இறுதி நாளான இன்று பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உரையுடன் கூட்டம் முடிந்தது.
இக்கூட்டத்தில், பாஜக ஆட்சியின் மீதான அவப்பெயர்களை நீக்கி கட்சியை வலுப்படுத்துவது குறித்து அதிகம் ஆலோசிக்கப்பட்டுள்ளது. நில கையகப்படுத்துதல் சட்டம் குறித்து பாஜக மீது மக்களுக்கு எழுந்துள்ள சந்தேகங்களை நீக்குவதற்கு முழு மூச்சாக உழைப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில், கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடத்துவது, ஏப்ரல் 14ம்தேதி, அம்பேத்கர் ஜெயந்தி விழாவை பிரமாண்டமாக நடத்துவது போன்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய அருண் ஜேட்லி " பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட வளர்ச்சி முன்மாதிரியை ஏற்படுத்த முயற்சிக்கிறோம். காஷ்மீரில் பிடிபி உடனான கூட்டணி குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
2013ம் ஆண்டு காங்கிரஸ் கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் மசோதா விவசாயிகளுக்கு எதிரானது. பாசனம், கிராமப்புற சாலைகள், வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு 2015 மசோதாவில் குறைபாடு நீக்கப்பட்டு, திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு அரசு பல வலுவான முடிவுகளை எடுத்துள்ளது" என்றார்.