சும்மா சும்மா 1962 யுத்தத்தையே 'பிறாண்டி' கொண்டிருக்கும் சீன ஊடகங்கள்!
1962-ம் ஆண்டு யுத்தம் குறித்தே சீன ஊடகங்கள் திரும்ப திரும்ப எழுதி பூச்சாண்டி காட்டுகின்றன.
டெல்லி: எல்லையில் போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் 1962-ம் ஆண்டு யுத்தத்தையே சீன ஊடகங்கள் சுட்டிக்காட்டியே எழுதி வருகின்றன.
சிக்கிம் எல்லையில் பூடானின் டோக்லாம் பீடபூமியை ஆக்கிரமிக்கும் முயற்சிகளில் சீனா மும்முரமாக உள்ளது. இதை நமது ராணுவத்தினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
சீனா மிரட்டல்
இதனால் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக 1962-ம் ஆண்டு யுத்தத்தில் இந்தியா தோல்வி அடைந்ததாக சுட்டிக்காட்டி சீன அரசு பிரதிநிதிகள் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
அரசு ஊடகங்கள்
இதேபோல் சீன அரசு ஊடகங்களும் சிக்கிமை இந்தியாவிடம் இருந்து தனிமைப்படுத்தும் வகையிலான பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அத்துடன் 1962-ம் ஆண்டு யுத்தத்தைப் பற்றியும் பக்கம் பக்கமாக சீன அரசு ஊடகங்கள் எழுதி வருகின்றன.
கம்யூனிஸ்ட் ஊடகம்
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகமான பீப்பிள்ஸ் டெய்லியில் இன்று 1962-ம் ஆண்டு எழுதப்பட்ட தலையங்கத்தை பிரசுரித்து இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளது. அப்போது இந்தியாவுக்கு சீன அரசு விடுத்த மிரட்டலையும் அது பதிவு செய்துள்ளது.
விஷம பிரசாரம்
இப்படி சீன ஊடகங்கள் தொடர்ந்து விஷம பிரசாரம் மேற்கொண்டால் இந்தியாவை பலவீனப்படுத்த முடியும் என கணக்குப் போடுகின்றன. ஆனால் 1967-ல் சிக்கிம் எல்லையில் வாங்கிய மரண அடியை வசதியாக மறந்துவிடுகின்றன சீன ஊடகங்கள்.