தலித் இளைஞரை நாவால் ஷூவை சுத்தம் செய்ய வைத்த போலீஸ்காரர்கள்.. குஜராத்தில் அதிர்ச்சி
குஜராத்தில் தலித் ஒருவரை 15 பேரின் ஷூவை நாக்கால் சுத்தம் செய்ய வைத்த கொடூரம் அரங்கேறியுள்ளது.
குஜராத்: குஜராத்தில் தலித் ஒருவரை 15பேரின் ஷூவை நாக்கால் சுத்தம் செய்ய வைத்து 'தண்டனை' வழங்கியுள்ளனர் போலீசார்.
குஜராத் மாநிலம் அம்ராய்வாடியை சேர்ந்த 40-வயது தலித் ஹர்ஷத் ஜாதவ் காவல் நிலையத்தில் கொடூரமான முறையில் நடத்தப்பட்டு உள்ளார்.

டிசம்பர் 29-ம் தேதி அப்பகுதியில் இருக்கும் சாய்பாபா கோவிலில் கூட்டம் மற்றும் பதட்டமான நிலை இருந்து உள்ளது. என்ன காரணம் என தெரிந்துக் கொள்வதற்காக ஹர்ஷத் ஜாதவ் சென்று உள்ளார். அங்கு நடக்கும் விஷயம் என்ன என்று கேள்வியை எழுப்பி உள்ளார், ஆனால் அவர் கேள்வி எழுப்பிய நபர் போலீஸ்காரர் என்பது பின்னர்தான் தெரியவந்து உள்ளது.
இதனைத்தொடர்ந்து ஹர்ஷத்தை அவர் தாக்கியுள்ளார். இதற்கு அவரின் மனைவி மற்றும் தாய் கண்டனம் தெரிவிக்கவே மூவரையும் அந்த போலீஸ்காரர், காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவருடைய ஜாதியை கேட்ட போலீசார், தங்கள் 15 பேருடைய காலணியையும் நாவால் சுத்தம் செய்யுமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர். இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
காலில் விழுந்து மன்னிப்பு கேட்கவும் கட்டயப்படுத்தப்பட்டு உள்ளார் என்பது தெரியவந்து உள்ளது. காவல் நிலையத்தில் மிகவும் மோசமான நிலையில் அவர் நடத்தப்பட்டு உள்ளார், இதனை வெளியே சொல்லக்கூடாது எனவும் அவரை போலீஸ் மிரட்டி உள்ளது. இப்போது இவ்விவகாரம் வெளியே தெரியவந்து சர்ச்சையாகி உள்ளது. பல்வேறு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஜாதவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது எனவும் தெரியவந்து உள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications