பாரத் ஜடோ யாத்திரை.. ராஜஸ்தானில் ராகுலுடன் கைகோர்த்த ரகுராம் ராஜன்! மாஸ் காட்டும் காங்கிரஸ்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடைபெற்று வரும் 'பாரத் ஜடோ யாத்திரையில்' ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பங்கேற்றுள்ளார்.
எதிர் வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியை தயார் படுத்தும் விதமாகவும், பாஜகவுக்கு எதிராகவும் இந்த நடைப்பயணத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடங்கியுள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கப்பட்ட இந்த நடைப்பயணமானது கேரளா, ஆந்திரா, கர்நாடகா என பல மாநிலங்களை கடந்து தற்போது ராஜஸ்தானில் நுழைந்துள்ளது.
இமாச்சல் வெற்றி உற்சாகத்தில் ராகுல் காந்தி.. மீண்டும் தொடங்கியது பாரத் ஜோடோ யாத்திரை
ரகுராம் ராஜன்
இந்நிலையில் பாரத் ஜடோ யாத்திரையின் 98வது நாளான இன்று ராஜஸ்தான் மாநிலத்தின் சவாய் மாதோபூரின் படோதியில் இருந்து காலை நடைப்பயணம் தொடங்கியது. இப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். அப்போது திடீரென ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் இந்த நடைப்பயணத்தில் கலந்துகொண்டார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது மத்திய அரசை வெளிப்படையாக விமர்சித்தவர்தான் இந்த ரகுராம் ராஜன். இவர் எழுதியுள்ள புத்தகத்தில் தான் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரிக்கவில்லை என்று கூறியிருந்தார்.
100வது நாள்
இந்நிலையில் ராகுல் காந்தியுடன் நடைப்பயணத்தில் பங்கேற்று நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக கலந்துரையாடினார். பாரத் ஜடோ யாத்திரையில் அரசியல் பிரபலங்கள், முன்னாள் அதிகாரிகள் என பலரும் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர். இந்நிலையில் நாளை மறுநாள் இந்த நடைப்பயணம் 100வது நாளை எட்டுகிறது. இந்த 100வது நாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக ஜெய்ப்பூரில் பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல பெரிய அளவில் பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் ராகுல் காந்தி உரையாற்றுகிறார். மறுபுறம் இந்த நடைப்பயணத்தை பாஜகவினர் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.
காங்கிரஸின் நிலை
கடந்த சில மாதங்களில் காங்கிரஸ் கடும் சிக்கல்களை எதிர்கொண்டது. கட்சியிலிருந்து மூத்த தலைவர்கள் பலர் விலகினர். அதேபோல அடுத்து வரும் தேர்தல்களில் கட்சி ஜெயிக்குமா என்பதே பெரும் கேள்வியாக எழுந்தது. இந்நிலையில்தான் கட்சியை ஊக்கப்படுத்த ராகுல் காந்தி பயணத்தை தொடங்கினார். இதற்கிடையில் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ராகுல் காந்தி பெரிய அளவுக்கு பிரசாரம் செய்யவில்லை. நடைப் பயணத்தை வெற்றி பெற செய்வதையே குறிக்கோளாக கொண்டிருந்தார்.
வெற்றியை நோக்கி
பிரசாரத்திற்கே போகவில்லையென்றாலும் இமாச்சலப் பிரதேசத்தில் கட்சி பெரும்பான்மையான வெற்றியை பெற்றது. ஆட்சியிலிருந்த பாஜக தோற்கடிக்கப்பட்டது. ஆனால் இதற்கு நேர்மாறாக குஜராத்தில் காங்கிரஸ் வரலாற்று தோல்வியடைந்தது. இதற்கு முன்னர் இம்மாநிலத்தில் 30 இடங்களுக்கு குறைவாக சரிந்ததாக சரித்திரம் கிடையாது. ஆனால் இம்முறை வெறும் 16 இடங்களில் கட்சி சுருண்டது. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் மறுபுறத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி கொடி நாட்டுவதை நோக்கி காங்கிரஸ் வேகமாக முன்னேறி வருகிறது என்று கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.