கோவா தேர்தல்: இலவச மின்சாரம், குடிநீர்- பெண்களுக்கு ரூ1,000.. ஆம் ஆத்மி அமர்க்கள வாக்குறுதி
பனாஜி: கோவாவில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் இலவச மின்சாரம், குடிநீர் மற்றும் பெண்களுக்கு மாதம் ரூ1,000 வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார்.
டெல்லியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். கோவா மாநிலத்திலும் ஆம் ஆத்மி கட்சிக்கு சில இடங்கள் கிடைக்கும் என்கின்றன அந்த கருத்து கணிப்புகள்.
கோவா மாநிலத்தைப் பொறுத்தவரை மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா இணைந்து மெகா கூட்டணி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கோவா சட்டசபை தேர்தலுக்கான வாக்குறுதிகளை அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார். கோவாவில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் இலவச மின்சாரம், குடிநீர் வழங்கப்படும்; 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ1,000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். கோவாவில் சுற்றுலாத்துறையை சர்வதேச தரத்துக்கு உயர்த்துவோம்; வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ3,000 ஊக்கத்தொகை, கிராமங்களில் மருத்துவமனைகள் என்பதும் ஆம் ஆத்மியின் தேர்தல் வாக்குறுதி.
மேலும் சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் சூழ்நிலையைப் பொறுத்து பாஜக அல்லாத கட்சிகளுடன் கூட்டணி அமைக்கவும் ஆம் ஆத்மி தயார் என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.