டெல்லி நீதிமன்றத்தில் மீண்டும் ஜே.என்.யூ. கன்னையாகுமார், பத்திரிகையாளரைத் தாக்கிய வக்கீல்கள்!
டெல்லி: டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் இன்று தேச துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக (ஜே.என்.யூ.) மாணவர் சங்கத் தலைவர் கன்னையாகுமார் மற்றும் பத்திரிகையாளர் ஒருவர் தாக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
ஜே.என்.யூ. வளாகத்தில் இந்தியாவுக்கு எதிராக, பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர் என்பது குற்றச்சாட்டு. இதனடிப்படையில் கன்னையாகுமார் தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீதான வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை குறித்து செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் மீது திங்கள்கிழமையன்று கொடூரத் தாக்குதல் நடத்தப்பட்டது. கன்னையாகுமாரின் சகாக்களும் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.
பாஜக எம்.எல்.ஏ. வெறித்தனம்
டெல்லி பாஜக எம்.எல்.ஏ. ஷர்மா தலைமையிலான கும்பல்தான் வெறித்தனமான தாக்குதலை நடத்தியது. இச்சம்பவம் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் நேரில் பத்திரிகையாளர்கள் முறையிட்டனர். உச்சநீதிமன்றத்திலும் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கன்னையாகுமார் மீது தாக்குதல்
உச்சநீதிமன்றத்தில் இன்று காலை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற விசாரணையின் போது 5 பத்திரிகையாளர்கள், 2 மாணவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.
இதனிடையே கடுமையான கெடுபிடிகளுக்கு இடையே கன்னையாகுமார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கன்னையாகுமார் மீது சிலர் கல்வீசித் தாக்கினர். இதனால் கன்னையாகுமாரை பாதுகாப்பாக 'இழுத்து'ச் சென்று நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
பத்திரிகையாளர் மீதும் தாக்குதல்
அதேபோல் இந்த வழக்கு விசாரணை நடைபெறும் இடத்துக்கு தேசிய கொடிகளை ஏந்தியபடி வழக்கறிஞர்கள் வந்தே மாதரம் என முழக்கமிட்டு வந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. அத்துடன் பத்திரிகையாளர் ஒருவர் தம்மை வழக்கறிஞர்கள் சிலர் தாக்கியதாகவும் புகார் கூறினார்.
கன்னையாகுமார் மற்றும் பத்திரிகையாளர் மீதான தாக்குதலால் டெல்லி பாட்டியலா நீதிமன்றத்தில் பதற்றமான சூழல் உருவானது.
பாஜக எம்.எல்.ஏ.வுக்கு மத்திய அமைச்சர் கண்டனம்
இதனிடையே பத்திரிகையாளர்கள், மாணவர்களை டெல்லி பாஜக எம்.எல்.ஏ. ஷர்மா தாக்கியதற்கு மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், யாரும் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு வன்முறையில் இறங்கக் கூடாது என்று எச்சரித்தார்.
அதே நேரத்தில் கல்வி வளாகங்களில் தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதை அனுமதிக்கவும் முடியாது; கன்னையாகுமார் மீது தேசதுரோக சட்டம் பாய்ந்தது சரியானதுதான் என்றார்.