ஆட்சிக்கு வந்து அரையாண்டு ஆயாச்சு: சந்திரசேகரராவ் vs சந்திரபாபு நாயுடு யார் பெஸ்ட்?
ஹைதராபாத்: இந்தியா சமீபத்தில் கண்டறிந்த மோசமான ஒரு போராட்டம் ஆந்திராவை பிரிக்கும்போது நடந்ததாகத்தான் இருக்கும். ஆனால் மாநிலம் பிரிக்கப்பட்டு தெலுங்கானா பிறந்த பிறகும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவுக்கும் நடுவே இணக்கம் ஏற்படவில்லை. இருவரும் முகத்தை திருப்பிக் கொண்டு நடக்கின்றனர்.
தெலுங்கானாவிற்கு நடந்த தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமித்தி தலைமையிலும், ஆந்திராவில் தெலுங்கு தேசம் தலைமையிலும் ஆட்சி அமைந்துள்ளது. தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முதல்வராக பதவியேற்று 1 வாரம் கழித்து சந்திரபாபு நாயுடுவும் பதவியேற்றதால், இன்று இருவருமே ஆறு மாதங்களை அதாவது அரை ஆண்டுகளை முதல்வர்பதவியில் கழித்துள்ளனர். இப்போது இருவர் ஆட்சியின் ஒரு ஒப்பீடு அவசியமாகிறது.
தெலுங்கானா
ஐம்பதாண்டு கால போராட்டத்திற்கு பிறகு உதயமான தெலுங்கானாவின் மகிழ்ச்சி மன நிலையில் இருந்து மக்கள் இன்னும் வெளிவரவில்லை. முதல் ஆறு மாத காலத்தில், ஆந்திராவையும், அதன் முதல்வரையும் பற்றி திட்டி தீர்க்க சந்திரபாபு நாயுடு நிறைய நேரத்தை செலவிட்டுள்ளார். அதையே சந்திரபாபு நாயுடுவும் திருப்பிச் செய்து பதிலடி கொடுத்த திருப்தியில் உள்ளார்.
தோல்விகள்:
தெலுங்கானாவில் மின்சார பிரச்சினையை தீர்க்க முடியாமல் ராவ் அரசு தடுமாறி வருகிறது. சந்திரசேகரராவ், தொழில் வளர்ச்சி குறித்த பார்வை கொண்டவர் இல்லை, அதில் ஆர்வம் காண்பிப்பதில்லை என்பதும் மின்சார உற்பத்திக்கு அவர் முக்கியத்துவம் தராததற்கு காரணமாகும். நிதி நிலை குறித்து யோசிக்காமல் பதவிக்கு வந்ததும், விவசாய கடனை சந்திரசேகரராவ் தள்ளுபடி செய்தார். இதனால் பல தொழில்நிறுவனங்கள் தெலுங்கானாவில் இருந்து வெளியேற தயாராகி வருகின்றன. முதலீடு செய்வதாக கூறிய தொழிலதிபர்கள் இன்னும் முதலீடு செய்யாமல் இருப்பது குறித்தும் முதல்வர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
விவசாயிகள் படும் பாடு
விவசாய கடனை தள்ளுபடி செய்ததும் சந்திரசேகரராவ் அரசு மீது விவசாயிகளுக்கு நம்பிக்கை வந்தது. ஆனால், நடப்பு நிலவரம் தெரியாமல், தேர்தலில் சொன்ன வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்ற முயன்றதால் விவசாயிகள் நிலைமை மோசமாகவே உள்ளது. புதிய விவசாய கடன்களை வங்கிகள் தர மறுக்கும் நிலையில், விவசாயிகளின் தற்கொலைகள் தெலுங்கானாவில் அதிகரித்துள்ளன. மின்சார தட்டுப்பாடும் விவசாயத்திற்கு எதிரியாக மாறியுள்ளது.
மாணவர்கள் ஏமாற்றம்
தெலுங்கானா பிறந்தால் தங்களது சோகங்கள் மறைந்துவிடும் என்று, நினைத்த மாணவர்களும் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். தனி மாநிலம் அமைந்தால் மண்ணின் மைந்தர்கள் என்ற அடிப்படையில், வேலைவாய்ப்புகள் உடனே கிடைத்துவிடும் என்று அவர்கள் நம்பினார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததைவிட தெலுங்கானா அரசு மெதுவாக செயல்படுவதாக மாணவர்கள் உணர்கிறார்கள். ஹைதராபாத்தில் சந்திரபாபு நாயுடு ஒருங்கிணைந்த ஆந்திராவின் முதல்வராக இருந்தபோது பல்வேறு ஐடி நிறுவனங்களை கொண்டுவந்தார். அதை தனது சாதனையாக இப்போது சந்திரசேகரராவ் கூறிக்கொள்கிறார். ஆனால் புதிதாக வேலை வாய்ப்பு எதையும் அவர் உருவாக்கவில்லை. அதே நேரம், அரசு அலுவலர்களும், போலீசாரும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏனெனில் அவர்களுக்கு சம்பள உயர்வு கிடைத்துள்ளது.
நல்ல விஷயங்கள்
சில நல்ல விஷயங்களும் சந்திரசேகரராவ் ஆட்சியில் நடக்காமல் இல்லை. வீர மரணம் அடையும் போலீசாரின் குடும்பங்களுக்கு ராவ் ரூ.10 லட்சம் அறிவித்துள்ளார். விவசாயிகளுக்கு ரூ.4250 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். காவல்துறையின் பாதுகாப்புக்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்துல்ளார். விதவைகளுக்கான ஓய்வூதியத்தை அதிகரித்துள்ளார். அதேபோல, முதியவர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. தனி மாநிலம் கேட்டு போராடியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
சந்திரபாபு நாயுடு:
ஆந்திராவை பொறுத்தளவில் தெலுங்கானாவைவிட சவால்கள் அதிகமாக உள்ளது. சந்திராபாபு நாயுடு இன்னும் புதிய தலைநகரை தேர்ந்தெடுக்கவில்லை. விஜயவாடா மற்றும் குண்டூர் நடுவே சிங்கப்பூரை போன்ற நகரம் 2019ம் ஆண்டுக்குள் தலைநகராக உருவாக்கப்படும் என்று கூறியுள்ளார் நாயுடு.
முதலீடுகள் வர வேண்டும்
ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளிலுள்ள முதலீட்டாளர்களிடம் ஆந்திராவில் முதலீடு செய்ய நாயுடு வலியுறுத்தியுள்ளார். இருப்பினும் இன்னும் முதலீடுகள் வரவில்லை. எனவே, ஆந்திராவின் பொருளாதாரம் முதுகெலும்பு இல்லாமல் நிற்கிறது.
பற்றாக்குறை
2014-15ம் நிதியாண்டில் ரூ.16000 கோடி பற்றாக்குறை ஆந்திராவில் நிலவுகிறது. ஹுட்ஹுட் புயலால் சீரழிந்த ஆந்திராவை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பும், செலவீனமும் சந்திரபாபு நாயுடு தலைமீது உள்ளது.
நேர்மறை
முதலீட்டை ஈர்ப்பதில் வெற்றி பெற்ற வரலாறு கொண்டவர் சந்திரபாபு நாயுடு. அவரது துரிதமான நடவடிக்கைகள், அவரே கூறியதை போல 2022ல் ஆந்திரா மாடல் மாநிலமாக மாறும் என்ற நம்பிக்கை ஆந்திர மக்களுக்கு உள்ளது.