பெங்களுரு குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டவர்... 6 ஆண்டுகளுக்குப் பின் கேரளாவில் கைது
திருவனந்தபுரம்: பெங்களுரு குண்டு வெடிப்பு வழக்கில் 6 ஆண்டுகளாக தேடப்பட்டவரை கேரள போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
கடந்த 2008ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி பெங்களூரில் அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டு வெடித்தது. இது தொடர்பாக பெங்களுரு போலீசார் நடத்திய விசாரணையில், இந்த குண்டு வெடிப்பில் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த நசீர், ரெய்சல் உள்பட சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து பெங்களுரு போலீசார் கேரள போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி நசீரை கேரள போலீசார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே குரும்பம்பெருங்குடியில் உள்ள வெடிபொருள் கடையில் இருந்து அமோனியம் நைட்ரேட் வெடிபொருளை திருடியது தெரியவந்தது. இந்த வெடிபொருளைதான் பெங்களுரு குண்டு வெடிப்பில் தீவிரவாதிகள் பயன்படுத்தியுள்ளனர்.
கடையில் இருந்து நசீருக்கு வெடிபொருளை திருடி கொடுத்த கண்ணூரை சேர்ந்த ரெய்சல் என்பது தெரிய வந்தது. இதையடுத்து ரெய்சலை கேரள போலீசார் தேடி வந்தனர். அவர் கத்தார் நாட்டுக்கு தப்பி சென்றது தெரிய வந்தது.
இந்த நிலையில் ரெய்சல் கேரளாவுக்கு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து கோழி்க்கோடு, கொச்சி விமான நிலையத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். காலை கோழிக்கோடு விமான நிலையம் வந்த ரெய்சலை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ரெய்சலை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சென்டரல் ரயில்நிலையத்தில் நடந்த குண்டு வெடிப்பிலும் அவருக்கு தொடர்பு இருக்குமா என்று கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.