காவலர் தேர்வுக்கு வந்த பெண்களின் மார்பளவை அளக்கும் ஆண் போலீஸ்.. ராஜஸ்தானில் சர்ச்சை
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் காவலர் பணிக்கு ஆள் எடுக்கும் முகாம் ஒன்றில் ஆண் போலீஸ்காரர் ஒருவர் பெண் போட்டியாளர்களின் உடல் அளவுகளை எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் சிட்டோர்கார் மாவட்டத்தில் வனக்காவலர் பணிக்கு ஆள் எடுக்கும் முகாமில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. உடல் தகுதித் தேர்வில் பங்கேற்ற பெண் போட்டியாளர்களுக்கு, அங்கே இருந்த ஆண் காவலர் ஒருவர் உயரம், மார்பளவு உள்ளிட்ட அளவுகளை எடுத்துள்ளார். இது வீடியோவாக இணையத்தில் வெளியானது.
இதைக் கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பெண் போட்டியாளர்களுக்கு பெண் போலீசே இவ்வாறு செய்ய வேண்டும் என இந்த செயலுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அம்மாநில காங்கிரஸ் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கை, ‘பெண் முதல்வராக ஆளும் மாநிலத்தில், பெண் போட்டியாளர் ஒருவருக்கு உடல் தகுதித் தேர்வை ஆண் போலீஸ் நடந்துவது கண்டிக்கத்தக்கது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் பாஜகவைச் சேர்ந்த வசுந்தரா ராஜே முதல்வராக இருக்கிறார். ராஜஸ்தானின் முதல் பெண் முதல்வர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இம்மாதத் தொடக்கத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வந்த பெண்களில் சுடிதார் அணிந்து வந்தவர்களை, அவர்களின் துப்பட்டாவை கழற்றித் தரும்படி அதிகாரிகள் கேட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications