மோடி பிரதமரானால் பேரழிவு ஏற்படும் என்பதா?: மன்மோகன்சிங்குக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம்!
டெல்லி: டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நாட்டின் பிரதமரானால் பேரழிவு ஏற்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்த கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மன்மோகன்சிங், நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் கூறியதாவது:
நரேந்திர மோடி பிரதமரானால் நாட்டுக்குப் பேரழிவு என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறுகிறார். இத்தகைய கருத்துகள் நகைப்புக்குரியன. 2002ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் துயரமானவைதான். ஆனால் அது தொடர்பான சிறப்பு புலனாய்வுக் குழுவின் விசாரணையில் மோடி குற்றமற்றவர் என்று தெரிவிக்கப்பட்டுவிட்டது.
அச்சம்பவத்தில் மோடிக்கு தொடர்பில்லை என சிறப்பு புலனாய்வு குழுவும், நீதிமன்றங்களும் கூறிய பின்பும் நாட்டின் உயர் பதவியை வகிக்கும் ஒருவர் இவ்வாறு கூறுவது துரதிர்ஷ்டவசமானது என்றார். மேலும் மன்மோகன்சிங்கின் இந்த கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்றார்.
அருண் ஜெட்லி அட்டாக்
பிரதமர் மன்மோகன்சிங் அளித்த பேட்டி கேலிக்கூத்தாக இருக்கிறது என்றும், இன்று நடந்தது அவருக்கு வழியனுப்பு பிரஸ் மீட் என்றும் பா.ஜ.க ராஜ்யசபா எதிர்கட்சி தலைவர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். மேலும், விலைவாசியை உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை பிரதமர் ஒப்புக் கொண்டுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங் தம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.. 2ஜி, நிலக்கரி ஊழலை தடுக்க பிரதமர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அருண் ஜெட்லி குற்றம் சாட்டினார்.
ஷா நவாஸ் ஹூசைன்
குஜராத்தை தனது பதவிக் காலத்தில் "முன் மாதிரி மாநிலம்" என்று உயர்த்திக்காட்டிய மோடியை இவ்வாறு விமர்சித்தது தவறானது. "மோடி பிரதமரானால் நாட்டிற்கு அழிவு ஏற்படும் என்று பிரதமர் கூறியுள்ளார். ஆனால் பிரதமரின் இந்த 10 ஆண்டு கால ஆட்சியில் நாடு மிகப்பெரிய பேரழிவுகளை சந்தித்துள்ளது என்று கூறுவதே மிகப்பொருத்தமாக இருக்கும்" என்று பா.ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷா நவாஸ் ஹுசைன் டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications