ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்- மாநில உரிமைகள் பறிப்பு- கூட்டாட்சியை கல்லறைக்கு அனுப்புறீங்க... உமர் அப்துல்லா
ஶ்ரீநகர்: ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் விவகாரத்தில் மாநில அரசின் வீட்டோ பவர் எனப்படும் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதற்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநிலங்களின் கேடர்களாக அறியப்படுகின்றனர். இத்தகைய அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு மாற்ற முடிவெடுத்தால் மாநில அரசுகளின் ஒப்புதல் அவசியம்.

மத்திய அரசுப் பணிக்கு கேட்டாலும் கூட அதிகாரிகளை மாநில அரசுகள் அனுப்ப மறுக்கலாம். இதற்கு பல முன்னுதாரண நிகழ்வுகள் இருக்கின்றன. தமிழகத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மேற்கு வங்கத்தின் தற்போதைய முதல்வர் மமதா பானர்ஜி ஆகியோர் மத்திய அரசு கேட்டும் மாநில அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு அனுப்பாமல் போராடி இருக்கின்றனர்.
மாநில அரசுகளின் இந்த அதிகாரத்தில் இப்போது மத்திய அரசு கை வைக்கிறது. அதாவது ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசு பணிக்கு அழைக்கும் போது மாநிலங்களின் ஒப்புதல் தேவை இல்லை என்கிற வகையில் சட்ட திருத்தம் கொண்டுவர உள்ளது மத்திய அரசு. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

மத்திய அரசின் இம்முயற்சிக்கு மேற்கு வங்கம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதே வரிசையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக உமர் அப்துல்லா கூறுகையில், 2019-ல் ஜம்மு காஷ்மீர் தமது மாநில அந்தஸ்தை இழந்தது. இப்போது அனைத்து மாநிலங்களின் உரிமைகளையும் மத்திய அரசு பறித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். மேலும் கூட்டாட்சி முறையை கல்லறைக்கு அனுப்புகிற நடவடிக்கைதான் இது எனவும் உமர் அப்துல்லா விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications