இப்போதெல்லாம் பருந்துகள் வருவதில்லை.. தகனத்திற்கு மாறும் பார்சிகள்!
மும்பை: பார்சி சமூகத்தினர் மிகுந்த ஆலோசனைகளுக்கு பின்னர் தற்போது இறந்தவர்களை எரியூட்டும் தகன முறைக்கு மாற ஆரம்பித்துள்ளனர். காரணம், முன்பு போல பருந்துகள் வருவதில்லை என்பதால்.
பருந்துகளுக்கும், இறுதிச் சடங்குகளுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது.? பார்சி சமூகத்தில் இறந்தவர்களின் உடல்களை எரியூட்டவோ அல்லது அடக்கம் செய்யவோமா மாட்டார்கள். மாறாக, பருந்துகள் அதைத் தின்ன விட்டு விடுவர். ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது. பருந்துகளைப் பார்க்கவே முடிவதில்லை. அருகிப் போய் விட்டது. இதனால் உடல்களை எரியூட்ட ஆரம்பித்துள்ளனர் பார்சி சமூகத்தினர்.
மும்பையைச் சேர்ந்த 90 வயதான கைகோபாத் ருஸ்தம்பார்ம், தனது மறைவுக்குப் பின்னர் தனது உடலை பருந்துகள் கொத்தித் தின்னும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்தார். ஆனால் கடந்த மாதம் அவர் மரணமடைந்த பின்னர் அவரது உடலை எரியூட்டி இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.
மும்பையில் இப்போதெல்லாம் பார்சி இனத்தவர்கள் இறந்தால் உடல்களை எரியூட்டி வுருகின்றனர். மாறி வரும் காலத்திற்கேற்ப சடங்குகளிலும் அவர்கள் மாற்றத்தை ஏற்க ஆரம்பித்து விட்டனர். ருஸ்தம்பார்மின் மனைவி கோர்ஷெட், தனது 82வது வயதில் கடந்த ஜனவரியில் மரணமடைந்தார். அவரது உடலையும் எரியூட்டவே செய்தனர்.
பார்சிகளுக்கென்று நீண்ட பாரம்பரியமும், சுயேச்சையான பல பழக்க வழக்கங்களும் உள்ளன. ஜொராஸ்டிரியர்கள் என்பதுதான் பார்சி இனத்தவரின் உண்மையான பெயர். 1000 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் பெர்சியாவிலிருந்து இடம் பெயர்ந்து இந்தியாவுக்கு வந்தனர். இந்தியா இப்போது இவர்களின் தாயகமாக மாறி விட்டது. தாயகம் மாறி வந்தாலும் தங்களது, மத, இன சடங்குகளை இவர்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கிறார்கள்.
நாட்டின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களைக் கணக்கெடுத்தால் அதில் பார்சி இனத்தவர் கணிசமாக இருப்பார்கள். முக்கிய உதாரணம், தொழிலதிபர் டாடா குடும்பம். பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் பார்சி இனம் இப்போது அருகி வருகிறது.
இவர்களின் முக்கியப் பழக்க வழக்கங்களில் ஒன்றுதான் இறந்த உடல்களை பறவைகளுக்கு இரையாகப் போடுவது என்பது. ஆனால் இப்போது இது மாற ஆரம்பித்து விட்டது. இறந்தவர்களை எரியூட்ட ஆரம்பித்துள்ளனர்.
மும்பையில் இதற்காகவே இடம் உண்டு. அங்கு இறந்தவர்களின் உடல்களை வைத்து விட்டுப் போய் விடுவார்கள். ஆனால் சமீப காலமாக உடல்களை தீண்ட ஒரு பறவையும் வராத நிலை ஏற்படவே இப்போது எரியூட்டலுக்கு மாறி விட்டனர்.
இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 60,000 பார்சி இனத்தவர்கள் இருப்பதாக ஒரு புள்ளிவிவரக் கணக்கு தெரிவிக்கிறது. நாடு சுதந்திரமடைந்தபோது இந்த எண்ணிக்கை ஒன்றரை லட்சமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.