கோர்ட் அனுமதி.. விக்ரம் கோத்தாரி, மகனிடம் 11 நாட்கள் துருவி துருவி விசாரணை நடத்தப்போகிறது சிபிஐ
டெல்லி: வங்கி கடன் மோசடி வழக்கில் கைதான ரோட்டோமேக் பேனா நிறுவன அதிபர் விக்ரம் கோத்தாரி, அவரது மகன் ராகுல் ஆகியோரை 11 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.
இந்திய பொதுத்துறை வங்கிகளில் ரூ. 800 கோடிக்கு மேல் கடன் பெற்றுவிட்டு அதனை திருப்பி செலுத்தாமல் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று ரூ. 3 ஆயிரம் கோடிக்கு மேல் மோசடி செய்ததாக விக்ரம் கோத்தாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கோத்தாரி மற்றும் அவரது மகன் ராகுல் கோத்தாரியிடம் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் விசாரணை நடத்தினர். முன்னதாக, விக்ரம் கோத்தாரியின் கான்பூர் வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்நிலையில் விசாரணையின் முடிவில் தொழிலதிபர் விக்ரம் கோத்தாரி மற்றும் அவரது மகன் ராகுல் கோத்தாரியை சிபிஐ கைது செய்தது.
அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்தது. 11 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிஐயின் கோரிக்கையை ஏற்று, சிபிஐ நீதிமன்றம் இன்று அனுமதி கொடுத்துள்ளது.