புனேவில் போலீஸ் நிலையம் முன் குண்டு வெடிப்பு- 2 பேர் காயம்
புனே: புனேவில் காவல்நிலையம் அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம், மத்திய புனே பகுதியில் பத்வார்பெத் என்ற பகுதியில் உள்ள போலீஸ் நிலையம் முன்பு இன்று மதியம் குறைந்த சக்தி
குண்டு வெடித்தது. இதில் இரண்டு பேர் காயம் அடைந்தனர். இருசக்கர வாகன பார்க்கிங் பகுதியில் குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு மாநகர ஆணையாளரும், வெடிகுண்டு நிபுணர்களும், மோப்பநாய்களும் வரவழைக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட விசாரணையில் குறைந்த செயல்திறன் கொண்ட குண்டு வெடித்துள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன. குண்டு வெடிப்பிற்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புனே நகரில் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நிகழ்வது தொடர்கதையாகிவருகிறது. கடந்த 2010ம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு நிகழ்ந்து 17 பேர் பலியானார்கள்.
இதேபோல 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புனே நகரின் மிகவும் பரபரப்பான ஜங்க்ளீ மகராஜ் சாலையில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பால், ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. தற்போது காவல் நிலையம் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.