வரதட்சணை கொடுமை... ரூ. 50,000 கேட்டு மனைவியின் மூக்கை வெட்டிய கணவர்... மாமியாரும் உடந்தை!
லக்னோ: உத்திரப்பிரதேச மாநிலத்தில் வரதட்சணை பிரச்சினை காரணமாக மனைவியின் மூக்கை வெட்டிய கணவரையும், அதற்கு உடந்தையாக இருந்த மாமியாரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
உத்திரபிரதேச மாநிலம் ஷாக்ஜாகான்பூரை சேர்ந்த சஞ்சீவ் ரத்தோர் என்பவரது மனைவி கம்லேஷ் ரத்தோர் (25). இந்த தம்பதிக்கு 6 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணமான நாள் முதலே மனைவியை கூடுதல் வரதட்சணை கேட்டு தனது குடும்பத்தினரோடு சேர்ந்து கொடுமைப் படுத்தி வந்துள்ளார் சஞ்சீவ்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சமையல் செய்து கொண்டிருந்த மனைவியிடம் வரதட்சணை பிரச்சினை காரணமாக தகராறு செய்துள்ளார் சஞ்சீவ். அப்போது அங்கிருந்த கத்தியை எடுத்து மனைவியின் மூக்கை அவர் வெட்டியுள்ளார்.
இந்த சம்பவத்திற்கு சஞ்சீவின் தாயாரும் உடந்தை. அவர் கம்லேஷ் நகர்ந்து விடாமல் இறுக்கமாக பிடித்துக் கொள்ள, சஞ்சீவ் அவரது மூக்கை நறுக்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து சஞ்சீவ் தனது குடும்பத்தினரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இதனையடுத்து கம்லேசை அவருடைய பெற்றோர்கள் வெட்டப்பட்ட மூக்குடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர், ஆனால் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூக்கை ஒட்ட வைக்க முடியாது என்று கூறிவிட்டனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள சஞ்சீவ் மற்றும் அவரது குடும்பத்தினரைத் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த கம்லேஷின் 6 வயது பெண் குழந்தையும் நேரில் பார்த்ததாக போலீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ. 50 ஆயிரம் வரதட்சணை கேட்டு கம்லேஷைக் கொடுமைப் படுத்தி வந்துள்ளார் சஞ்சீவ். ஆனால், கம்லேஷின் பெற்றோர் ஏழை என்பதால், அந்தப் பணத்தை தர இயலாமல் தவித்து வந்துள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.