கருமம் கருமம்.. போர்வையை 2 மாதத்திற்கு ஒருமுறைதான் துவைக்கிறோம்.. பகீர் கிளப்பும் ரயில்வே!
ரயிலில் பயன்படுத்தப்படும் போர்வையை 2 மாதத்திற்கு ஒருமுறைதான் துவைக்கிறோம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்து இருக்கிறது.
டெல்லி: உலகில் இந்திய ரயில்வே துறைதான் மிகவும் பெரிய ரயில்வே துறை ஆகும். ஒவ்வொரு வருடமும் இதற்கு தனியாக பெரிய பட்ஜெட் போடப்பட்டு வந்தது.
ஆனால் மத்தியில் பாஜக ஆட்சி வந்த பின் ரயில்வே பட்ஜெட் தனியாக போடப்படவில்லை. மத்திய அரசு பட்ஜெட்டுடன் சேர்த்து ரயில்வே பட்ஜெட்டும் இடம் பிடித்து வருகிறது.
இதனால் ரயில்வே துறை சரியாக இயங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முக்கியமாக அங்குச் சுத்தம் சரியாக கடைப்பிடிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.
அதிகமாகக் குற்றச்சாட்டு
ரயிலில் முன்பதிவு பெட்டிகளில் தலைகாணி, போர்வை அளிக்கப்படுவது வழக்கம். இதில் சரியான பராமரிப்பு பணிகள் செய்யப்படுவதில்லை என்று கூறப்பட்டு வந்தது. இதற்காகப் பலர் ரயில்வே துறையின் தளத்தில் புகார்கள் அளித்து வந்தனர்.
கேள்வி
இந்த விஷயத்தில் சிஏஜி தலையிட்டது. இந்தப் புகார்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கேட்டது. மேலும் எத்தனை முறை, எப்போது தலைகாணி, போர்வை சுத்தப்படுத்தப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பி இருந்தது.
பாராளுமன்றத்தில் பதில்
இதற்கு ரயில்வே துறை பாராளுமன்றத்தில் பதில் அளித்துள்ளது. அதில் ''ஒவ்வொரு முறை பயன்படுத்திய பின் தலைகாணி உறை துவைக்கப்டுகிறது. மேலும் மெத்தை விரிப்புகளும் துவைக்கப்படும். இது சரியாக செய்யப்படவில்லை என்றால் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது'' என்றுள்ளது.
2 மாதத்திற்கு ஒருமுறை
ஆனால் அங்கு இருக்கும் போர்வைகள் 2 மாதத்திற்கு ஒருமுறை மட்டுமே துவைக்கப்படுகிறது என்று ரயில்வே துறை கூறியுள்ளது. தினமும் அதை மாற்றுவது இல்லை என்றும் கூறியுள்ளது. இதனால் ரயில்வே துறையில் சுத்தம் குறித்த கேள்வி எழுந்துள்ளது.