சிவசேனா, தெ.தேசம்.. பாஜகவுடன் கூட்டணி இல்லை...ஏன் இந்த திடீர் முழக்கங்கள்..பின்னணியில் என்ன நாடகம்?
பாஜக தலைமையிலான கூட்டணியில் ஏற்படும் சலசலப்புகள் நாடகமாகவே பார்க்கப்படுகிறது.
Recommended Video
டெல்லி: பாஜகவின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து கட்சிகள் திடீர் என விலகுவது, பாஜகவுடன் கூட்டணியே கிடையாது என முழக்கங்கள் எழுவதன் பின்னணியில் பெரிய நாடகம் இருக்கிறது என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.
பாஜகவுடன் கால் நூற்றாண்டு காலமாக கூட்டணியில் இருந்து வந்தது சிவசேனா. அவ்வப்போது பாஜகவை விமர்சித்தாலும் மத்திய அமைச்சரவையில் நீடித்து கொண்டுதான் இருக்கிறது சிவசேனா.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்டதாக சிவசேனா அறிவித்தது. லோக்சபா தேர்தலிலும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலிலும் தனித்து போட்டியிடுவோம் எனவும் சிவசேனா அறிவித்தது.
திமுக அறிவிப்பு
இதையடுத்து தெலுங்குதேசம் கட்சியும் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவோம் என மிரட்டிக் கொண்டிருக்கிறது. இதேபோல் திடீரென திமுகவும் பாஜகவுடன் கூட்டணியே வைக்க மாட்டோம் என முழங்கத் தொடங்கியுள்ளது.
லோக்சபா தேர்தல் ஆதாயம்
இந்த கட்சிகள் அனைத்துமே பாஜகவிடம் இருந்து தற்போதே தங்களை அன்னியப்படுத்துவதாக அறிவிப்பதே நாடகமாகத்தான் தெரிகிறது. இப்படி அறிவிப்பதன் மூலம் இந்த கட்சிகளுக்கு வரும் லோக்சபா தேர்தல்களில் நிச்சயம் ஆதாயம் கிடைக்கும்.
மாநில கட்சிகள் தயவில்...
இதைத்தான் பாஜகவும் விரும்புகிறது. ஏனெனில் லோக்சபா தேர்தலில் 2014-ம் ஆண்டைப் போல பெரும்பான்மை கிடைக்காது என்பது பாஜகவுக்கு நன்றாகவே தெரியும். ஆகையால் மாநில கட்சிகளின் தயவில்தான் இனி ஆட்சி அமைக்க வேண்டியது இருக்கும்.
பாஜகவுக்கு ஆதரவு?
இப்போது இந்த கட்சிகள் பாஜகவிடம் இருந்து விலகுவதாக அறிவித்து தேர்தலை சந்திக்கலாம். ஆனால் தேர்தலுக்குப் பின் இக்கட்சிகள் எதுவும் பாஜகவை ஆதரிக்கவே ஆதரிக்காது என்று சொல்வதற்கில்லை. அப்போது வலிமையான ஆட்சிக்காக.. மாநிலத்தின் நலனுக்காக என ஏதோ ஒரு சாக்கை கூறி பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கவே முயற்சிக்கும். இதுதான் இந்த கட்சிகளின் இப்போதைய நாடகங்களின் பின்னணி என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.