இந்தியா - அமெரிக்கா உறவு இயற்கையானது: அமெரிக்கா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பெருமிதம் !
வாஷிங்டன்: ஜனநாயக நாடுகளான இந்தியா - அமெரிக்கா ஆகிய இரு நாடுகளிடையேயான உறவு இயற்கையானது என பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
மூன்று நாள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அமெரி்க்க நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது: அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது பெருமை அளிக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை நீங்கள் கவுரவித்துள்ளீர்கள்.
மனிதர் அனைவரும் சமம் என்ற ஆபிரகாம் லிங்கத்தின் வார்த்தைகளுக்கு வடிவம் தந்த அவை இது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதிநிதி என்ற முறையில் இந்த அவையில் பேசுவது பெருமை அளிக்கிறது.
மகாத்மா காந்தியின் அகிம்சை முறை மார்ட்டின் லூதர் கிங்கை ஈர்த்தது. பேச்சுரிமை, வழிப்பாட்டு உரிமை, சமத்துவ உரிமை ஆகியவற்றை எங்கள் நாட்டின் தலைவர்கள் எங்களுக்கு அளி்த்திருக்கிறார்கள். இந்தியா ஒன்றாக வாழ்கிறது, ஒன்றாக வளர்கிறது, ஒன்றாகவே கொண்டாடுகிறது. மற்ற நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமான உறவை கொண்டுள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியது போல் இந்தியா - அமெரிக்கா இடையே இயற்கையாகவே நட்பு உள்ளது. தீவிரவாதிகள் மும்பையில் தாக்குதல் நடத்தியபோது அமெரிக்கா கண்டனம் தெரிவித்ததை இந்தியா மறக்காது. ஆசிய நாடுகளை தீவிரவாதம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.
இந்தியா மேல் அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளது எங்களுக்கு தெரியும். அமெரிக்க நாடாளுமன்றம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்திய நாடாளுமன்றத்திலும் நல்லிணக்கை உருவாக்க முயற்சி செய்து வருகிறோம்.
கடல் வழி வணிகத்தை பெருக்க வியாபார வழித்தடங்களை பாதுகாப்பானதாக உருவாக்க வேண்டும். இந்த முயற்சியில் அமெரிக்கா, இந்தியா இணைந்து செயலாற்றுவது அவசியமான ஒன்று. தீவிரவாதத்தை ஒழிக்கும் முயற்சியில் பல வீரர்களை நாம் இழந்துள்ளோம். தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் பல நிலைகளில் வலுப்பெற வேண்டும்.
தீவிரவாதத்தில் இருந்து மதத்தை பிரித்து பார்க்க வேண்டும். தீவிரவாதத்தை ஒழிக்க தீவிரவாதத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்பதில் அமெரிக்க படைகளுக்கு இந்தியா பெரிய அளவில் உதவி வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே நிலவும் நல்லுறவால் பல துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளோம். இந்தியா - அமெரிக்கா இடையே நட்புறவை வளர்ப்பதில் அமெரிக்கா மிகவும் உதவியிருக்கிறது. இவ்வாறு மோடி பேசினார்.
அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தும் 5 வது இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.