ஈராக் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்த கூடாது: அமெரிக்க பெண்களில் அதிகம் பேர் கருத்து
வாஷிங்டன்: ஈராக்கில் தீவிரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சரியா தவறா என்பது குறித்து அந்த நாட்டில் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் ஆண்கள் மற்றும் பெண் குடிமக்கள் நடுவே கருத்து வேற்றுமை அதிகம் காணப்படுவது தெரியவந்துள்ளது.
ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் மீது விமான தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளது அமெரிக்கா. இதில் அந்த நாட்டு மக்களின் கருத்து குறித்து யுகோவ் அமைப்பு கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. இதில் 53 சதவீத ஆண்கள் தாக்குதலை வரவேற்றுள்ளனர். அதே நேரம் 42 சதவீத பெண்கள் மட்டுமே தாக்குதலை வரவேற்றுள்ளனர்.
ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா, சிரியா நாடுகளில் அமெரிக்க படைகள் செயலாற்றியபோதும், இதேபோன்ற கருத்துக்கணிப்புகளை இந்த நிறுவனம் எடுத்தது. அப்போதும் இந்த விஷத்தில் கருத்து தெரிவித்தபோது பாலின பாகுபாடு இருந்தது.
இடதுசாரி, வலதுசாரி, ஏழ்மை, பணக்காரத்தன்மை, தேசியம் மற்றும் சர்வதேசவாதம் போன்ற களங்களில் ஆண் மற்றும் பெண்கள் நடுவே மிகுந்த வேறுபாடு இருப்பதுதான் இதுபோன்ற கருத்து சிதறல்களுக்கு காரணம் என்று கூறுகிறது அந்த ஆய்வு.