'தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே.. ரவுடிகள் வந்து விடுவார்கள்'.. ஸ்டாலின் அரசை போட்டுத்தாக்கிய இ.பி.எஸ்!
காஞ்சிபுரம்: தி.மு.க ஆட்சிக்கு வந்து விட்டால், ரவுடிகள் தானாக வந்து விடுவார்கள் என்று அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.தமிழகத்தில் செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் அக்டோபர் 6-ம் தேதி மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது.
சட்டமன்றத்தில் வெற்றியை கோட்டைவிட்டு, 3-வது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்த அதிமுக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாகை சூட தீவிரம் காட்டி வருகிறது. பாஜக-அதிமுக கூட்டணியில் பல இடங்கள் இறுதி செய்யப்பட்டு விட்டன.
மிஸ்டர் எடப்பாடி பழனிச்சாமி! உண்மையை மறைக்காதீர்கள்.. கோபமடைந்த தங்கம் தென்னரசு!
எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களிளும், நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
உள்ளாட்சித் தேர்தல் மிக முக்கியம்
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க சார்பில் ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனைக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அப்போது நிர்வாகிகளிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலைவிட மிக முக்கியமான தேர்தல் ஊரக உள்ளாட்சி தேர்தல், மக்களுக்கு நேரடியாக பணி செய்வதற்கு உள்ளாட்சித் தேர்தல் தான் வழிவகுக்கும் எனக் கூறினார்
வெற்றி பெற வேண்டும்
நாம் எதிர்க்கட்சியாக இருந்து வருகிறோம். ஆனாலும் வேட்பாளர்களை பார்க்கும்போது இப்பொழுதே வெற்றி பெற்றதாக தோன்றுகிறது என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, தி.மு.க நிச்சயம் தில்லுமுல்லு வேலை செய்து வெற்றி பெற முயற்சி செய்வார்கள். அதை மீறி நாம் வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்தார். அ.தி.மு.க ஆட்சியில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறையில் நடைபெற்றது. ஆனால் தற்போது கள்ளக்குறிச்சியில் 2 மாவட்ட வார்டு உறுப்பினர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டே இவ்வாறு செய்துள்ளனர் என்று குற்றம்சாட்டினார்.
நீட் தேர்வு ரத்து எங்கே?
திமுக சார்பில் 525 வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டது ஆனால் அதில் 1, 2 மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலினும், ஸ்டாலினும் மாறிமாறி மேடைகளில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என கூறி வந்தனர். ஆனால் நீட் தேர்வு தற்போது நடைபெற்று தான் வருகிறது. திமுகவின் வாக்குறுதிகளை நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது எனக்கூறினார்.
ரவுடிகள் அட்டகாசம்
தி.மு.க ஆட்சி வந்தால் தானாக ரவுடிகள் வெளியே வந்துவிடுவார்கள் அதற்கு எடுத்துக்காட்டுதான் நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 450 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் என எடப்பாடி பழனிசாமி கூறினார். வாக்கு எண்ணும்போது கவனமாக இருக்கவேண்டும், தி.மு.க.வினர் ஏஜென்ட் திசை திருப்பி வாக்குகளை மாற்றிவிடுவார்கள் என நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார்.